மும்பை: 35 வயதில் அஜிங்கியா ரஹானேவால் இந்திய அணியில் கம்பேக் கொடுக்கும் போது, 29 வயதே ஆகும் என்னால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாதா என்று ஹனுமா விஹாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த முறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி வெற்றிபெற்றதற்கு மிக முக்கிய காரணமான வீரர்களில் ஒருவர் ஹனுமா விஹாரி. எப்போதெல்லாம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளார். இதுவரை 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 5 அரைசதம் உட்பட 839 ரன்களை குவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் புஜாராவுக்கு மாற்று வீரராக அறியப்பட்ட ஹனுமா விஹாரி, காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகினார். ஆனால் அதன்பின்னர் விஹாரி இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவே இல்லை. அண்மையில் துலீப் டிராஃபிக்கான வடக்கு மண்டல அணி அறிவிக்கப்பட்ட போது ஹனுமா விஹாரி கேப்டனாக செயல்பட்டார்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து ஹனுமா விஹாரி பேசுகையில், எனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ, அப்போதெல்லாம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். ஒருவேளை என் சிறந்த ஆட்டம் இந்திய அணிக்கு போதவில்லை என்று நினைக்கிறேன்.
அதற்காக எனது முயற்சியை கைவிடப் போதவில்லை. ஓய்வுபெறும் வரை கம்பேக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனது வயது 29 மட்டுமே ஆகிறது. அஜிங்கியா ரஹானேவால் 35 வயதில் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் போது, என்னாலும் முடியும் என்று நம்புகிறேன். என்னால் இந்திய டெஸ்ட் அணிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும்.
உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நிச்சயம் இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை அனைவரும் டெஸ்ட் வீரராகவே பார்க்கிறார்கள். அது சரியல்ல. ஏனென்றால் குறுகிய ஓவர்களுக்கான போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.