ஆக்லாந்து: மழையால் ஆட்டம் கைவிடப்பட்டிருந்தாலும் நியூசிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்கும்.
நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த நிலையில், 38வது ஓவரில் மழை வந்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. மாற்றப்பட்ட விதிகளின்படி, இன்று மழையால் ஆட்டம் கைவிடப்பட்டிருந்தால், ரிசர்வ் டே என்று அழைக்கப்படும், நாளை புதன்கிழமை, விட்ட இடத்தில் இருந்தே போட்டி தொடர்ந்திருக்கும்.

ஒருவேளை நாளை போட்டி நடைபெற்று, அப்போதும் மழை பெய்து ஆட்டம் முழுமையடைந்திருக்காவிட்டால், நியூசிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்கும்.
ஏனெனில், ஐசிசி புதிய விதிமுறைப்படி, லீக் போட்டியில் எந்த அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளதோ அந்த அணிதான், போட்டி கைவிடப்பட்டாலும், அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

நியூசிலாந்து, 6 லீக் போட்டிகளிலும் வென்ற நிலையில், தென் ஆப்பிரிக்காவோ, இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் தோற்றிருந்தது. எனவே ரூல்ஸ், நியூசிலாந்துக்கு சாதகமாக இருந்தது.

சிறப்பாக ஆடும்போதும், ஏதாவது தடைகள் ஏற்படுவது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் சகஜம். இம்முறையும் அதுபோல நடந்துவிடக் கூடாது. போட்டியின் மூலமே வெற்றி தோல்வி தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்டனர் கிரிக்கெட் உலக ரசிகர்கள். ஆனால், இன்றும் டக்வொர்த் லீவிஸ் கைவரிசையை காட்டிவிட்டது.