மும்பை: எம்எஸ் தோனி மட்டும் இல்லையென்றால் சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாது என்று இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி 5வது முறையாக சென்னை அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதன் மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது. அதுமட்டுமல்லாமல் 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும், 12 முறை ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறிய ஒரே அணி என்ற சாதனையையும் சென்னை அணி படைத்துள்ளது.

இதற்கு சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரும் காரணமாக உள்ளனர். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை எந்தெந்த வீரர்கள் தேவை என்பதை காட்டிலும், எந்தெந்த வீரரை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம். அந்த வகையில் கேப்டன் தோனி ஒவ்வொரு வீரரையும் பயன்படுத்தி கில்லி போல் கோப்பையை வென்றுள்ளார். இன்றும் ஜடேஜாவை தூக்கி கொண்டாடி ஆனந்த கண்ணீர் விட்ட காட்சிகளை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை அணியால் மட்டும் தொடர்ச்சியாக பிளே ஆஃப் சுற்றுக்கு எப்படி முன்னேற முடிகிறது என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். வாசிம் ஜாபர் பேசுகையில், சென்னை அணியை வெற்றி தோனியால் மட்டுமே சாத்தியமாகி வருகிறது. சிஎஸ்கே அணியில் இருந்து தோனியை மட்டும் எடுத்துவிட்டு பார்த்தால், இவ்வளவு பலம் வாய்ந்த அணியாக நிச்சயம் இருக்காது. ஏனென்றால் இதுபோன்ற ஒரு அணியை வைத்து தோனியால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும்.

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் பவுலர்களை கொஞ்சம் பார்க்க வேண்டும். இதற்கு முன் 2 சீசன்களை துஷார் தேஷ்பாண்டே விளையாடிய போது இவ்வளவு வெற்றிகரமாக அவர் இருக்கவில்லை. பதிரானா, ஆகாஷ் சிங் உள்ளிட்ட வீரர்கள் சென்னை அணிக்கு புதியவர்கள். தீபக் சஹரால் முழு சீசனையும் கூட விளையாட முடியவொல்லை. ஐபிஎல் தொடர் வரலாற்றை பார்க்கும் போது தீக்சனா அவ்வளவு அனுபவம் வாய்ந்த வீரர் இல்லை. மொயின் அலி மற்றும் ஜடேஜா சில போட்டிகளில் பந்துவீச அழைக்கப்படவில்லை.
இப்படியொரு பவுலிங் அட்டாக்கை வைத்து தோனியால் மட்டுமே ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும். சென்னை அணியில் உள்ள வீரர்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ, அதனை வைத்து திட்டம் போடுபவர் தோனி. அதனால் தான் சென்னை அணியின் வெற்றி தோனியால் மட்டுமே சாத்தியம் என்று கூறுகிறேன். ஒருவேளை தோனி இல்லையென்றால், சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற போராட வேண்டிய சூழல் வரும் என்று தெரிவித்துள்ளார்.