பெங்களூரு: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடியால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை என்றாலும், அவர் சோகமடைந்த தேவையில்லை என்று ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் பவுலிங் அட்டாக் உலகின் அதிபயங்கர அட்டாக் போல் அந்நாட்டு முன்னாள் வீரர்களால் பேசப்பட்டது. அதற்கு நசீன் ஷா, ஷாகின் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ராஃப் மூவரும் வேறு வேறு வகையான பவுலர்கள் என்பதும் முக்கியமான காரணமாக அமைந்தது. ஆனால் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் மோசமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங்கில் சொதப்பினாலும், அந்த அணியின் பவுலர்கள் செயல்பாடு தான் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர பவுலர் ஷாகின் அப்ரிடி 3 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ரன்களை விட்டுக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து போட்டிகளில் திணறி வருகிறார். இதற்கு பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா இல்லாததும் மறைமுக காரணமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் ஷாகின் அப்ரிடி தனது ஃபார்மை மீட்டெடுக்க ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் சில அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வாசிம் அக்ரம் பேசுகையில், ஷாகின் அப்ரிடி சிறப்பாகவே பந்துவீசி வருகிறார். உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வரும் சூழலில், அவரால் ஸ்பெஷலாக எந்த மாற்றத்தையும் உடனடியாக கொண்டு வர முடியாது. ஷாகின் அப்ரிடி மனதளவில் கொஞ்சம் தளர்வுடன் இருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு அவர் தான் விக்கெட் டேக்கராக இருந்துள்ளார்.
என்னை பொறுத்தவரை ஷாகின் அப்ரிடிக்கு விக்கெட் கிடைக்கவில்லை என்றாலும், சாதாரண எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். வழக்கத்திற்கு மாறாக வேறு ஏதும் செய்ய தேவையில்லை. எப்படி பயிற்சி மேற்கொள்வோமோ அதேபோல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். என்னை பொறுத்த வரை ஷாகின் அப்ரிடிக்கு ஒரேயொரு சிறந்த ஸ்பெல் அவரை மீட்டு கொண்டு வரும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணி அடுத்த போட்டியில் வலிமை வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கவுள்ள போட்டி என்பதால், பவுலர்களின் நிலைமை பரிதாபமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் பவுலர்கள் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் பல்வேறு முனைகளில் இருந்து அறிவுரைகள் அளிக்கப்பட்டு வருகிறது.