
பாலக்காட்டு மாதவன்
கேரளாவின், பாலக்காடு நகரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒரு பேரூராட்சியான கொல்லங்கோடு என்ற ஊரை சேர்ந்தவர்தான் இந்த கிருஷ்ண சந்திரன் காராடே. ஆங்கிலத்தில் பலரும் கராத்தே என்றுதான் இவரது குடும்ப பெயரை வாசிக்கிறார்கள். ஆனால் காராடே என்பது அவரது குடும்ப பெயராம்.

தெரு முதல் டிவி வரை
இதுகுறித்து கிருஷ்ண சந்திரனிடமே கேட்டபோது அவர் கூறியதாவது: கொல்லங்கோடு ஊரின் தெருக்களில் டென்னிஸ் பந்தில் நான் விளையாடியபோது எனது ஊர் மக்கள் என்னை பார்த்திருப்பார்கள். இப்போது உலக கோப்பையில் விளையாடும் என்னை, வீட்டு தொலைக்காட்சி பெட்டிகளின் வாயிலாக எனது ஊர்மக்கள் பார்க்கப்போகிறார்கள் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது.

சென்னை மாணவன்
கிரிக்கெட் ஆர்வத்தை தொடங்கியது கேரளாவில் என்றபோதிலும், கிரிக்கெட்டில் என்னை நான் வளர்த்தெடுத்தது சென்னையில்தான். சென்னையின் செயின்ட் ஜான்ஸ் இன்டர்நேசனல் பள்ளியில்தான் நான் படித்தேன். அப்போது கிரிக்கெட்டை வீட்டில் அடைந்து கிடைப்பதற்கு மாற்றாக ஒரு எஸ்கேப் சாதனமாகத்தான் பயன்படுத்தி வந்தேன். ஆனால் பிறகு அதிலேயே எனக்கு ஈடுபாடு அதிகரித்தது" என்று கூறும் கிருஷ்ண சந்திரன், பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின்போது தினேஷ் கார்த்திக்கை எதிர்த்து ஆடும் வாய்ப்பையும் பெற்றாராம்.

பெங்களூரிலும் பழக்கம்
இதன்பிறகு பெங்களூரில் குடியேறிய கிருஷ்ண சந்திரன், ராபின் உத்தப்பா படித்த அதே பள்ளியில்தான் படித்துள்ளார். கல்லூரி காலத்தில் ஸ்டூவர்ட் பின்னி இவரது கல்லூரி தோழராம். கேரள 19வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியில் கிருஷ்ணசந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தபோது, சூதாட்ட புகாரால் அணியை விட்டு நீக்கப்பட்டுள்ள ஸ்ரீசாந்த் இவருக்கு ரூம் மேட்டாம்.

வாய்ப்பு மறுப்பு
கேரள ஜூனியர் அணியில் இடம்பிடித்த பிறகும் ஏன் ஐக்கிய அரபு எமிரேட் அணிக்காக விளையாட வேண்டி வந்தது என்று கேட்டால், "இந்தியாவை பொறுத்தளவில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தால் மட்டும்தான், நாம் யார் என்பதையாவது எட்டிப் பார்ப்பார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு தெரிந்தவர்கள் எல்லாம் அடுத்த கட்டத்திற்கு போனபோது, வாய்ப்பு கிடைக்காமல் நான் முடங்க வேண்டியதாயிற்று. எனவே அரபு எமிரேட்டில் வாய்ப்பை பெற்று விளையாடுகிறேன்" என்றார்.

சச்சினுக்காக பூஜை
சச்சின் டெண்டுல்கரின் பெரிய ரசிகரான கிருஷ்ண சந்திரன், சச்சினுக்காக அவர் செய்த அர்ப்பணிப்புகளை இப்படி கூறுகிறார். "சச்சின் பேட்டிங் செய்யும்போதெல்லாம், பூஜையறையில் பூஜை செய்வது வழக்கம். 2003 உலக கோப்பையின்போது பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் அதிரடியாக 98 ரன்களை குவித்தார். ஆனால் நான் அவரது பேட்டிங்கை முழுமையாக பார்க்கவில்லை. ஏனெனில் பாதி நேரம் நான் பூஜையறையில்தான் உட்கார்ந்திருந்தேன். அந்த போட்டியில் சச்சின் அவுட் ஆன பிறகு டிவியை ஆப் செய்துவிட்டு கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டேன்" என்றார் கிருஷ்ண சந்திரன்.

பார்வையாளராக சச்சின்
வரும் 28ம்தேதி பெர்த், வகா மைதானத்தில், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட் மோத உள்ளது. அப்போது சச்சின் மைதானத்தில் இருந்து போட்டியை ரசிக்க உள்ளார், கிருஷ்ண சந்திரன் அவரின் முன்பு திறமையை காண்பிக்க உள்ளார்.

எங்க பார்த்தாலும் மலையாளிதான்
நியூசிலாந்தின் நெல்சன் நகரில் இன்று ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் எமிரேட் விளையாடுவதற்காக அந்த நகருக்கு சென்றது. அந்த குட்டி நகரத்தின் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற கிருஷ்ணனுக்கு இன்ப அதிர்ச்சியாம். ஏனெனில், அந்த ரெஸ்டாரண்டை நடத்தும் பெண் ஒரு மலையாளி. இவரை பார்த்து கை குலுக்கி ஆனந்தப்பட்டாராம். "நிலவுக்கு போனாலும் ஒரு மலையாளி அங்கு ஏற்கனவே டீக்கடை போட்டு வைத்திருப்பார் என்று சும்மாவா சொன்னார்கள்" என்று புன்முறுவல் பூக்கிறார் கிருஷ்ண சந்திரன். பெஸ்ட் ஆப் லக் சாரே..


Click it and Unblock the Notifications