அபுதாபி: இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரில் இங்கிலாந்து வீரர் டாம் கர்ரன் ரன் அவுட் ஆன பின்னரும் மீண்டும் பேட்டிங் செய்தது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இந்த டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கும், கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணிக்கும் இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது. அடுத்து கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங் செய்து வந்தது. அப்போது கடைசி இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் எடுத்தால் கல்ஃப் அணி வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.

அந்த அணி 18 வது ஓவரின் முடிவில் 6 விக்கெட்களை இழந்து இருந்தது. சரியாக 18 வது ஓவரின் கடைசி பந்தில் அந்த சம்பவம் நடந்தது. கல்ஃப் அணியின் மார்க் அடேர் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அல்சாரி ஜோசப் வீசிய பந்தை அடித்து விட்டு ஒரு ரன் ஓடினார் அடேர். அப்போது மறுமுனையில் நின்று இருந்த டாம் கர்ரன் ஓடிவந்து விக்கெட் கீப்பர் நின்று இருந்த முனையில் தனது பேட்டை வைத்து விட்டு கிரீசை விட்டு உடனடியாக வெளியே சென்றார்.
ஆனால், அப்போதுதான் கீரான் பொல்லார்ட் பந்தை எடுத்து விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரனை நோக்கி வீசினார். பந்து நிக்கோலஸ் பூரனை வந்து அடையும் முன்னரே டாம் கர்ரன் கிரீசை விட்டு வெளியே சென்று விட்டார். விதியின்படி இது அவுட் தான். அம்பயரும் இதை பரிசீலனை செய்து ரன் அவுட் என அறிவித்தார்.
டாம் கர்ரன் இது அவுட் இல்லை என சில வினாடிகள் வாதிட்டார். பின்னர் பாதி தூரம் வெளியே சென்ற நிலையில் கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் அறிவுறுத்தலின் பேரில் ஆடுகளத்திற்குள்ளேயே நின்றார். பின்னர் டாம் கர்ரன் மற்றும் ஆன்ட்டி பிளவர் அம்பயர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியுடன் வாக்குவாதம் செய்தனர்.
நீண்ட நேரமாக இந்த சம்பவம் நடந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி அந்த ரன் அவுட்டை திரும்ப பெறுவதாக அறிவித்தனர். ஆனால், மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரனுக்கு இதில் விருப்பமில்லை. அவர் மிகவும் ஏமாற்றத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு நின்றார்.
அப்போது டாம் கர்ரன் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். பின்னர் இந்த போட்டியில் கடைசி பந்தில் கல்ஃப் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் டாம் கர்ரன் செய்தது சரியா? தவறா? என்ற விவாதம் எழுந்துள்ளது. பலரும் அவர் ரன் அவுட் ஆனது சரிதான். அவர் பந்து எங்கு இருக்கிறது என்றே தெரியாமல், போட்டி சூழ்நிலையை கருத்தில் கொள்ளாமல் கிரீசை விட்டு வெளியேறியது தவறு தான் என கூறி வருகின்றனர்.