இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இமாத் வாசிம், தனது மனைவி சானியா அஷ்பாக்கிற்கு துரோகம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் மீது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அவர் மற்றொரு பெண்ணுடன் லண்டனில் சுற்றித் திரிந்த காட்சிகள் இந்த சர்ச்சையை மேலும் பெரிதாக்கி உள்ளது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, இமாத் வாசிம் மற்றும் அவரது மனைவி பிரிந்து வாழ்வதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில், இமாத் வாசிம் மற்றும் சானியா அஷ்பாக் தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து சானியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவு, இந்த சர்ச்சைகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
அந்தப் பதிவில், "நான் உன்னை 9 மாதங்கள் தனியாகச் சுமந்தேன். இனிவரும் பயணத்திற்கு அல்லா எனக்கு மேலும் பலத்தைத் தருவாராக" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவில் தனியாக சுமந்தேன் என்றும், இமாத் வாசிமின் பெயர் குறிப்பிடப்படாததும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், சானியா தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரக் குறிப்பை (Bio) "இமாத் வாசிமின் மனைவி" என்பதிலிருந்து "இனாயா இமாத் மற்றும் ரயான் இமாத்தின் அம்மா" என்று மாற்றியுள்ளார். அவர் இமாத் வாசிமுடன் இருக்கும் அனைத்துப் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். அதே சமயம், இமாத் வாசிமின் பக்கத்தில் சானியாவுடனான புகைப்படங்கள் இன்னும் உள்ளன, மேலும் இருவரும் ஒருவரையொருவர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், நெட்டிசன்ஸ் இமாத் வாசிமை, நைலா ராஜா என்ற சமூக ஊடக செல்வாக்கு மிக்கவரும் வழக்கறிஞருமான ஒரு பெண்ணுடன் தொடர்புபடுத்தி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். லண்டனில் இமாத் வாசிம் ஒரு பெண்ணுடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி, இந்த வதந்திகளுக்கு மேலும் எண்ணெய் வார்த்தது.
நைலா ராஜா இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தற்செயலாக இமாத் வாசிமை சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின் போது வேறு சிலரும் உடன் இருந்ததாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், தங்களுக்குள் எந்தவிதமான உறவும் இல்லை என்றும், இந்த வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இமாத் வாசிம் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. இதற்கு முன்னரும் 2017 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண், இமாத் வாசிம் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதும் இமாத் வாசிம் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.
இந்த சமீபத்திய நிகழ்வுகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் சானியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.