லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மனைவியை அதிகாரிகள் ஈவிரக்கமின்றி கொடுமைப்படுத்துவதாகவும், அவரைப் பயன்படுத்தி தன்னை மிரட்டுவதாகவும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.ஏற்கனவே, சிறையில் கண்பார்வை வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் இம்ரான் கான், தற்போது மேலும் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்.
பாகிஸ்தானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஈத் - ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறையில் இருந்து தனது மகன் காசிம் கானுடன் தொலைபேசியில் பேசிய இம்ரான் கான், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான தகவல்களை அவரது மகன் காசிம் கான் தற்போது பொதுவெளியில் பகிர்ந்துள்ளார்.

"இந்த நாட்டின் நீதிபதிகள் தங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும். நாங்கள் நியாயம் கேட்டு பலமுறை நீதிமன்றத்தை நாடியும் எந்த பலனும் இல்லை. அவர்கள் சுயலாபத்திற்காக தங்கள் ஆன்மாவை விற்றுவிட்டனர். என்னை மனதளவில் உடைக்க முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் எனது மனைவி புஷ்ரா பீபியை குறிவைக்கிறார்கள். என்னை மிரட்டுவதற்காகவே, எனது மனைவியை அவர்கள் மனிதநேயமற்ற முறையில் நடத்துகிறார்கள்" என்று இம்ரான் கான் கடுமையாக சாடியுள்ளார்.
அரசு பரிசுகளை முறைகேடாக விற்றது மற்றும் அறக்கட்டளை தொடர்பான ஊழல் வழக்குகளில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் கடந்த 2024 டிசம்பர் மாதம் புதிய சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் முதல் அடியலா சிறையில் உள்ள புஷ்ரா பீபி, கடுமையான தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வாரத்திற்கு 30 நிமிடங்கள் மட்டுமே தன்னை சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், பல நேரங்களில் அதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் இம்ரான் கான் வேதனை தெரிவித்துள்ளார்.
தற்போது சிறையில் உள்ள இம்ரான் கானின் வலது கண்ணில் 85 சதவீத பார்வை பறிபோய்விட்டதாக அவரது சட்டக் குழுவினர் சமீபத்தில் தெரிவித்தனர். இதற்காக அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் அவருக்கு 3வது முறையாக கண்ணில் ஊசி செலுத்தப்பட்டது. இதன்பின்னர் அவர் மீண்டும் அடியலா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பார்வை இழப்பு மற்றும் சிறை கொடுமைகளால் தவிக்கும் இம்ரான் கானுக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை உடனடியாக வழங்கவும், அவரை அடிப்படை மனித உரிமைகளுடன் கண்ணியமாக நடத்தவும் வலியுறுத்தி இந்திய அணி வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உள்ளிட்ட 14 முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
