லாகூர்: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பாகிஸ்தான் பிரதமரும்,உலகக் கோப்பை வென்ற முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் உடல்நலம் மோசமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் 14 முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள், அவருக்கு உடனடியாக மருத்துவ பராமரிப்பு வழங்கவும், மனிதாபிமான முறையில் சிறையில் நடத்தவும் பாகிஸ்தான் அரசுக்கு வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தியாவின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோர் இந்த கடிதத்தில் கையெழுத்து போட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கானின் உடல்நலம் மோசமடைந்து வருவதாகவும், அவரது கண்பார்வை குறைந்து வருவதாகவும் அண்மையில் செய்தி வெளியாகின.

இந்த நிலையில், முன்னாள் கேப்டன்கள் அடங்கிய குழு, இம்ரான் கானுக்கு கண்ணியமான மற்றும் மனிதாபிமான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்த பாகிஸ்தான் அரசு முறையாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இந்த கடிதத்தில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், கிரெக் சேப்பல், மைக்கேல் அதெர்டன், ஆலன் பார்டர், மைக்கேல் பிரியர்லி, இயன் சேப்பல், பெலிண்டா கிளார்க், டேவிட் கோவர், கிம் ஹியூஸ், நாசர் ஹுசைன், கிளைவ் லாய்ட், ஸ்டீவ் வாக் , ஜான் ரைட் ஆகிய முன்னாள் கேப்டன்கள் கையெழுத்து போட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில், "அவர் விரும்பும், தகுதிவாய்ந்த நிபுணர்களிடமிருந்து உடனடியாக, போதுமான மற்றும் தொடர்ச்சியான மருத்துவ கவனிப்பு இம்ரான் கானுக்கு வழங்கப்பட வேண்டும் என இந்தக் குழு பாகிஸ்தான் அதிகாரிகளை கோரியுள்ளது. அவரது உடல்நலப் பிரச்சனைகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் கேப்டன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சர்வதேச தரங்களுக்கு இணங்க மனிதாபிமான மற்றும் கண்ணியமான சிறைச்சாலை நிலைமைகள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் வழக்கமான சந்திப்புகள், மற்றும் நியாயமான, வெளிப்படையான சட்ட செயல்முறைகளை எந்தவித தாமதமும் இன்றி அணுகும் உரிமை ஆகியவற்றையும் இம்ரான் கானுக்கு தரப்பட வேண்டும் என்று இந்த குழு வலியுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய செய்திகளின்படி, இம்ரான் கான் தனது வலது கண்ணில் சுமார் 85 சதவீதம் பார்வையை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும், பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. உலக கிரிக்கெட்டில் ஒரு புகழ்பெற்ற வீரரான இம்ரான் கான், பாகிஸ்தானை 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெற்றிபெற வழிநடத்தினார். அவரது திறமை, மன உறுதி, தலைமைத்துவம் மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவை எல்லைகளைத் தாண்டி தலைமுறைகளை ஊக்கப்படுத்தின. அவரது பங்களிப்புகள் உலகளவில் போற்றப்படுகின்றன.
கிரிக்கெட்டைத் தாண்டி, இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராகவும் ஒரு சவாலான காலகட்டத்தில் தேசத்தை வழிநடத்தினார். அரசியல் நிலைப்பாடுகள் எதுவாக இருந்தாலும், தனது நாட்டின் உயர்ந்த பதவிக்கு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமை அவருக்கு உண்டு.கடந்த இரண்டரை ஆண்டுகளாக சிறையில் அவரது உடல்நலம், குறிப்பாக அவரது பார்வை மோசமடைவது தொடர்பான செய்திகள் வெளிவந்த நிலையில், முன்னாள் கேப்டன்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். இது பாகிஸ்தானுக்கு உலக அளவில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.