லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உடல்நிலை குறித்து வெளிவரும் அனைத்து தகவல்களும் பொய் பிரச்சாரம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், உள்துறை அமைச்சருமான மோஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான 73 வயதான இம்ரான் கான், 2022இல் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன் பிறகு, ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் உள்ளார். அவரும் மனைவி புஷ்ரா பீபியும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையிடப்பட்டனர். அடுத்துவந்த தீர்ப்புகள் மொத்த தண்டனையை 31 ஆண்டுகளாக உயர்த்த, அவர் ராவல்பிண்டியில் உள்ள ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இம்ரானின் உடல் நிலை மோசமடைந்து வருவதாகவும், அவருடைய கண்பார்வை இழந்து வருவதாகவும், போதிய மருத்துவ சிகிச்சை, குடும்ப உறுப்பினர்களை சந்திக்காமல் தடுப்பது போன்ற செயல்களில் அந்நாட்டு அரசு ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் உட்பட 14 முன்னாள் கேப்டன்கள் இம்ரானுக்கு முறையான மருத்துவப் பராமரிப்பு, மனிதாபிமான சிகிச்சை வழங்க பாகிஸ்தான் அரசை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.
இதன் மூலம், இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த மோஹ்சின் நக்வி, இம்ரான் கானின் மருத்துவர்கள், “ இந்த சிகிச்சையை நாங்கள் செய்திருந்தால், இதேபோல்தான் செய்திருப்போம்" என்று கூறியதாகத் தெரிவித்தார். அரசியல் தலைவர்கள், "நாங்கள் திருப்தி அடைகிறோம், இதை எங்கள் மக்களிடம் தெரிவிப்போம்" எனக் கூறியதாகவும் நக்வி சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், இம்ரானின் சகோதரி அலீமா கான், தனிப்பட்ட மருத்துவர், குடும்பப் பிரதிநிதியை பரிசோதனை, சிகிச்சைக்கு அரசு அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். ஆனால், அரசியல் காரணங்களால் அலீமாவே சிகிச்சையை தாமதிப்பதாக நக்வி குற்றம் சாட்டினார். "'எங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொண்டால் பிரச்சினை அடங்கிவிடும் என அலீமா கட்சியிடம் தெரிவித்தார். அவர் தலையீட்டால் மூன்று நாட்கள் மருத்துவப் பரிசோதனை நடக்கவில்லை,' என்று நக்வி கூறினார். இம்ரான் கான் மரியாதையான முறையிலே நடத்தப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.