கராச்சி : பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான், இந்தியா, பாகிஸ்தான் இன்று மோதவுள்ள போட்டியை நேரில் காண வருவார் என சில செய்திகள் வலம் வருகின்றன.
இம்ரான் கான் இன்று பாகிஸ்தான் பிரதமாராக கடந்த மாதம் பதவி ஏற்றாலும், அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் என்ற அடையாளத்தோடு தான் பலராலும் இப்போது வரை அறியப்படுகிறார்.
இந்தியா, பாகிஸ்தானின் சிறந்த போட்டிகளில் இம்ரான் கான் தலைமை ஏற்று நடத்திய போட்டிகள் பல உண்டு. அதிலும் இதே ஐக்கிய அரபு நாட்டில் 80, 90களில் இந்தியா, பாகிஸ்தான் மோதிய போட்டிகளில் இம்ரானும் பங்கேற்றுள்ளார்.
சமீபத்தில் பிரதமராக பதவி ஏற்ற இம்ரான் கான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு தன் முதல் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை நேற்று முதல் மேற்கொண்டுள்ளார்.
எனவே, அவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டியை ஒரு பிரதமராக காண வருவார் என அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் கூறி வருகின்றன. இது இன்னும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.