ஜோகன்னஸ்பர்க்:சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து வரும் உலக கோப்பைக்கு பின் ஓய்வு பெற போவதாக தென் ஆப்ரிக்க வீரர் இம்ரான் தாஹிர் திடீரென அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். 39 வயதாகும் தாஹிர், பாகிஸ்தானில் பிறந்தவர். இருந்தாலும், தென் ஆப்ரிக்காவுக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

இதுவரை தென்னாப்பிரிக்காவுக்காக 95 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 156 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளும், 37 டி20 போட்டிகளில் 62 விக்கெட்டுகளும், 38 ஐபிஎல் போட்டிகளில் 53 விக்கெட்டுகளும் வீழ்த்தி தமது திறமையை 39 வயதிலும் நிருபித்து வருகிறார்.
இந்நிலையில், வரும் உலக கோப்பைத் தொடருடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற போவதாக திடீரென அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் இந்த முடிவினை எடுத்துள்ளேன். வாழ்க்கையின் முக்கிய நேரத்தில் சரியான முடிவினை எடுத்துள்ளேன்.
மேலும் தொடர்ந்து டி-20 போட்டிகளில் விளையாட உள்ளேன். ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்பேன் என்று கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.