கேப்டவுன்: டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் தான் சேர்க்கப்படாதது குறித்து இம்ரான் தாஹிர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், அக்டோபர் மாதம் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளது. அக்டோபர் 17 முதல் தொடங்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.

நவம்பர் 14ம் தேதி இத்தொடர் முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது.
முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.
இந்நிலையில், உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. நேற்று முன்தினம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் தங்கள் அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. ஆனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் டு பிளசிஸ், இம்ரான் தாஹிர், க்றிஸ் மோரிஸ் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பகிரங்கமாகவே இம்ரான் தாஹிர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அதில், "நான் உலகக் கோப்பை அணியில் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு கிரேம் ஸ்மித் என்னை தொடர்பு கொண்டு, 'உலகக் கோப்பையில் நீங்கள் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார். அதற்கு நான், 'நீங்கள் எனக்கு மரியாதை அளிப்பதால் நான் உற்சாகமாகவும் கௌரவமாக இருக்கிறேன். உலகக் கோப்பையில் விளையாட நான் தயார். நான் கடினமாக உழைக்கிறேன்' என்றேன். அதற்கு அவர், அனைத்து கிரிக்கெட் லீக்குகளிலும் உங்கள் செயல்திறனை பார்த்ததால் தான் உங்களை தொடர்பு கொண்டு உலகக் கோப்பையில் விளையாட அழைக்கிறேன். மேலும் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் பாப் டு ப்ளெசிஸ் போன்றோருடனும் பேசப் போவதாக கூறினார். ஆனால் அதன் பின்னர் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு நான் ஸ்மித் மற்றும் பவுச்சருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன், யாரும் எனக்கு பதிலளிக்கவில்லை. பவுச்சர் பயிற்சியாளரான பின்பு, அவருடைய திட்டங்கள் என்ன என்பதைச் சொல்ல அவர் என்னை ஒருமுறை கூட தொடர்பு கொள்ளவில்லை. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் 10 வருடங்கள் நாட்டுக்கு சேவை செய்தேன், நான் பயனற்றவன் என்று நினைக்கும் இவர்களை விட நான் இன்னும் கொஞ்சம் மரியாதைக்கு தகுதியானவன் என்று நினைக்கிறேன். நான் எப்போதுமே தென்னாப்பிரிக்காவிற்காக ஒரு உலகக் கோப்பையை வெல்ல வேண்டும், இந்த நாடு எனக்கு அளித்த வாய்ப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் நான் ஓய்வு பெறத் திட்டமிடவில்லை. நான் தேவைப்பட்டால் 50 வயது வரை விளையாடப் போகிறேன்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியில் டெம்பா பவுமா (c), கேஷவ் மகராஜ், குயின்டன் டி காக் (wk), ஜோர்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசன், எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டபிள்யூ முல்டர், லுங்கி நிகிடி, அன்ரிச் நார்ட்ஜே, டிவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ராசி வான் டெர் டஸன் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.