சென்னை: தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று தொடக்க போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடி ரன் குவித்த தமிழகத்தின் முரளி விஜய்க்கு உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இந்திய தேர்வாளர்கள் மறுத்துள்ளனர்.
விராத் கோஹ்லி போல முரளி விஜய்யும் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக ஆடி வந்தார். சதம், அரை சதம் என்று இவரும் தன் பங்குக்கு ரன் குவித்தார். அதை விட முக்கியமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக விளையாடும் இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்கு மட்டுமே உண்டு.

நடப்புத் தொடரிலும் கூட இவரது சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறிப் போகும் நிலையும் ஏற்பட்டது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இவர் விளையாடிய விதத்தைப் பார்த்தாலே இது தெரியும்.
இங்கு மட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே முரளி விஜய் நன்றாகத்தான் ஆடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் அவர் தற்போது நிலையாக ஆடி ரன் குவிக்கிறார். கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர்தான் அதிக ரன்களைக் குவித்துள்ளார் (402). ஆஸ்திரேலியத் தொடரிலும் இவர் 3 போட்டிகளில் 402 ரன்களைக் குவித்து வைத்துள்ளார். வேகப் பந்து வீச்சு, பவுன்ஸ் என எதைப் பார்த்தும் இவர் அஞ்சுவதில்லை என்பதே முரளியின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட். மேலும் வெளிநாடுகளில் இவர் சிறப்பாக விளையாடுவதும் அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனாலும் என்ன புண்ணியம்.. ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறப் போகும் உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் முரளி விஜய்க்கு இடம் கொடுக்கப்படவில்லை.
தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் நல்ல பார்முடன் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்போது அது அவர்களுக்கு மட்டுமல்லாமல் அணிக்கும் கூட பிரயோஜனமாக இருக்கும். இருப்பினும் இ்ந்திய தேர்வாளர்கள் அந்த அளவீட்டின்படி வீரர்களைத் தேர்வு செய்துள்ளனர் என்று தெரியவில்லை, புரியவில்லை.
மொத்தத்தில் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக ஆடியும் கூட அந்த மண்ணில் நடைபெறப் போகும் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்க முடியாத நிலைக்கு முரளி விஜய் தள்ளப்பட்டுள்ளார்.