லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள சுரேஷ் ரெய்னாவின் வருங்கால மாமனார் ஊரில் அனைவரும் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை காண வேண்டும் என்று பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது காதலி பிரியங்கா சவுத்ரியை வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளார். பிரியங்கா உத்தர பிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டத்தில் உள்ள பாமனோலி கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த கிராமத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இன்று யாரும் வேலைக்கு செல்லக் கூடாது, யாரும் விவசாயம் செய்யக் கூடாது, அனைவரும் கிரிக்கெட் போட்டியை பார்க்க வேண்டும் என்று பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. கிரிக்கெட் போட்டியை காண ஏதுவாக ப்ரொஜெக்டர் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பஞ்சாயத்து உறுப்பினர் பிரஹலாத் சிங் கூறுகையில்,
எங்கள் கிராமத்து பெண் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யப் போவது எங்களுக்கு எல்லாம் பெருமையான விஷயம். இந்நிலையில் இன்றைய போட்டியை காண சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம். எங்கள் மருமகன் விளையாடுவதை அனைவரும் பார்க்க வேண்டும் என்றார்.
பிரியங்காவின் பெற்றோர் மீரட்டில் வசித்து வருகின்றனர். அவரது தாத்தா, பாட்டி பாமனோலியில் வசித்து வருகிறார்கள். நெதர்லாந்தில் உள்ள வங்கியில் வேலை பார்க்கும் பிரியங்கா திருமணத்திற்காக இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.