மும்பை: ஐபிஎல் தொடர் ஒளிபரப்பு உரிமை கைவிட்டு போன 9 மாதங்களில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இருந்து 2 கோடி சந்தாதாரர்களை இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் ஓடிடி பயன்பாடு காரணமாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பாகி வந்தது. இதனை காண்பதற்காக ரசிகர்கள் பலரும் அதிக பணம் செலவழிக்க வேண்டிய தேவை இருந்தது. இதனால் வேறு வழியின்றி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் கட்டி வந்தனர்.

இது கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் முடிவுக்கு வந்தது. ஏனென்றால் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை அதிக தொகை கொடுத்து ஜியோ நிறுவனம் கைப்பற்றியது. இதனால் ஜியோ நிறுவனம் எவ்வளவு சந்தா கேட்பார்கள் என்று ரசிகர்கள் குழம்பிய நிலையில், ஐபிஎல் ஒளிபரப்பு இலவசம் என்று அறிவித்தது. இதனால் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இதனால் ரசிகர்கள் பலரும் ஜியோ சினிமாஸ் பக்கம் திரும்பினர். ஹாட்ஸ்டாரில் சினிமா மட்டும் காண்பிக்கப்படுவாதால், கிரிக்கெட் ரசிகர்கள் ஹாட்ஸ்டார் செயலியை பயன்படுத்த வேண்டிய தேவையே இல்லாமல் போனது. இதனால் ரசிகர்களை கவர்வதற்காக ஐசிசி தொடர்களை ஹாட்ஸ்டாரில் இலவசமாக காணலாம் என்று ஜியோ சினிமாஸ் போல் வேறு வழியில்லாமல் அறிவித்தது.
ஆனாலும் ஹாட்ஸ்டார் ஓடிடி-க்கு சந்தா கட்டி வந்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 38 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஹாட்ஸ்டார் நிறுவனம், 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 42 லட்சம் வாடிக்கையாளர்கள் இழந்தது.
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின்ன் ஹாட்ஸ்டார் செயலியை விட்டு கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் வெளியேறி இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலும் 1.25 கோடி வாடிக்கையாளர்களை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் இழந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன்ன் மூலம் கடந்த 9 மாதங்களில் மட்டும் சுமார் 2 கோடி வாடிக்கையாளர்களை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் இழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.