மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: கோப்பையை வாங்காம வர மாட்டாங்க போல!
லண்டன்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விளையாடிய 4 போட்டிகளிலும் மித்தாலி ராஜ் தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா என 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் இந்தியாவும், இலங்கையும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இலங்கையை வீழ்த்திய இந்தியா
50 ஓவர்கள் முடிவில் 232 ரன்கள் எடுத்த இந்திய அணி 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலங்கைக்கு இலக்கு நிர்ணயித்தது.
50 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 216 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 4வது வெற்றி
இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் இந்திய அணி 8 புள்ளிகளுடன் அரைஇறுதி வாய்ப்பை நெருங்கியுள்ளது.

கூடிக்கொண்டே செல்லும் பலம்
இந்திய அணியின் ஸ்மிரிதி மந்தனா, பூனம் ரவுத், மித்தாலி ராஜ் ஆகியோரின் பேட்டிங்கும், ஷிக்கா பாண்டே, ஜூலன் கோஸ்வாமி, எக்தா பிஷ்ட் ஆகியோரின் பவுலிங்கும் இந்திய அணிக்கு பலத்தை கூட்டிக் கொண்டே செல்கிறது. அவர்கள் அனைத்து போட்டியிலுஙம் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர்.

நாங்க தான் பாஸ்
ஆடவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பெரும் சரிவை சந்தித்தது. இந்நிலையில் தங்களின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் நாங்கள் தான் பாஸ் என கெத்தை காட்டி வருகின்றனர் மகளிர் அணியினர். சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றது. இது விராட் கோஹ்லி அணியின் சிறுபிள்ளை தனமான ஆட்டம் என பலர் விமர்சித்தனர்.

கோப்பை நமக்குதான்
இந்நிலையில் மகளிர் அணியினர் தங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்தி வருகின்றனர். வரும் 8ஆம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய மகளிர் அணியினர் இதே ஃபார்மில் தொடர்ந்தால் கோப்பையுடன் தான் நாடு திரும்புவார்கள் என்பதில் ஐயமில்லை...


Click it and Unblock the Notifications