தோஹா: "வரலாறு முக்கியம் அமைச்சரே!" என்று சொல்வதைப்போல, இந்தியா 'ஏ' அணி செய்த ஒரு காரியம் கிரிக்கெட் வரலாற்றில் அழியாத் தழும்பாக மாறியுள்ளது. வங்கதேச 'ஏ' அணியிடம் சூப்பர் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் தோற்றது மட்டுமல்லாமல், கேப்டன் ஜிதேஷ் சர்மா போட்ட தப்புக்கணக்கை இந்திய ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பாணியில் "வறுத்தெடுத்துள்ளார்".
இந்தியா 'ஏ' அணியின் தோல்விக்கு அடுத்த நாள், அஸ்வின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்: "நேற்றைய இந்தியா 'ஏ' மற்றும் வங்கதேச 'ஏ' போட்டியைத் தவறவிட்டவர்கள், தயவு செய்து பார்த்துவிடுங்கள். இப்போட்டி காலத்தால் அழியாது (It will stand the test of time)."

இதைப் படிக்கும்போது அஸ்வின் போட்டியைப் புகழ்வது போலத் தோன்றலாம். ஆனால், உற்று நோக்கினால் அது இந்தியா ஏ அணி நிர்வாகத்தின் முகத்தில் அடித்த மறைமுக அடி என்பது புரியும். "இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை இனி யாரும், எப்போதும் எடுத்துவிடக் கூடாது என்பதற்கு இதுவே ஒரு பாடம்" என்று அஸ்வின் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
வங்கதேச ஏ அணிக்கு எதிரான ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் 195 ரன்களை விரட்டிய இந்திய அணி 194 ரன்கள் எடுத்து போட்டியை சூப்பர் ஓவருக்கு எடுத்துச் சென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த போது 15 பந்துகளில் 38 ரன்களை விளாசி இருந்தார் வைபவ் சூர்யவன்ஷி.
எந்த ஒரு அறிவுள்ள கேப்டனும், களத்தில் பந்துகளைச் விளாசிய வைபவ் சூர்யவன்ஷியைத்தான் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய அனுப்பியிருப்பார். ஆனால், கேப்டன் ஜிதேஷ் சர்மாவுக்கு என்ன தோன்றியதோ? அதிரடி மன்னன் வைபவை வேடிக்கை பார்க்க வைத்துவிட்டு, தானே "ஹீரோ" ஆகலாம் என்று களமிறங்கினார்.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ரிப்பன் மண்டல் வீசிய முதல் பந்திலேயே ஜிதேஷ் சர்மா 'க்ளீன் போல்ட்' ஆனார். அடுத்த பந்திலேயே அசுதோஷ் சர்மாவும் அவுட். இரண்டு விக்கெட்டுகளும் காலி. அந்த சூப்பர் ஓவரில் இந்தியா எடுத்த ரன்கள் - 0!
கடைசியில் 0 ரன்களை வைத்துக்கொண்டு எப்படி ஜெயிக்க முடியும்? வங்கதேசம் சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த போதும் எளிதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குச் சென்றுவிட்டது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளப் போகிறது.
நன்கு செட் ஆன பேட்ஸ்மேனை அமர வைத்துவிட்டு, தானே களமிறங்கிய கேப்டனின் ஈகோ அல்லது மோசமான வியூகமே இந்தத் தோல்விக்கு முழுக் காரணம். இதைத்தான் அஸ்வின் தனது ட்வீட் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார். "காலத்தால் அழியாத போட்டி" என்று அவர் குறிப்பிட்டது, இந்த தவறைத் தான். இது கிரிக்கெட் பாடப்புத்தகங்களில் "எதைச் செய்யக்கூடாது" என்பதற்கு உதாரணமாக இருக்கும் என்பதையே அஸ்வின் மறைமுகமாக கூறி இருக்கிறார்.