மும்பை : இந்தியாவுக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடருக்கு ஆயுத்தமாகும் வகையில் இங்கிலாந்து லயன்ஸ் அணி தற்போது இரண்டு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்றிலும் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்றிலும் பங்கேற்கிறது.
இதில் இரண்டு நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் மோதியது. இந்திய ஏ அணியில் அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாக தலைமை தாங்க ரஜத் பட்டிதார், சர்ப்ராஸ்கான் போன்ற வீரர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் இங்கிலாந்து லயன்ஸ் அணி வீரர்களின் உண்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்க்க முயன்றனர். எனினும் நடுவரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இங்கிலாந்து லயன்ஸ் அணி தடுமாறியது.
எனினும் டான் மோஸ்ட்லி அதிகபட்சமாக 62 ரன்களும், ஒலி ராபின்சன் 45 ரன்கள் எடுக்க இங்கிலாந்து லயன்ஸ் அணி 51.1 ஓவரில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய ஏ பந்துவீச்சு தரப்பில் சுழற் பந்துவீச்சாளர் மனாவ் சுதர் மூன்று விக்கெட்டுகளையும் ஆகாஷ் தீப் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இந்த நேரத்தில் இந்திய ஏ அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 32 ரன்கள் எடுக்க ரஜத் பட்டிதார் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். தமிழக அணிக்காக விளையாடி வரும் பிரதோஸ் பால் 21 ரன்கள் எடுக்க சர்ப்ராஸ்கான் அபாரமாக விளையாடி 96 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதேபோன்று கே எஸ் பரத் தன் பங்கிற்கு 64 ரன்களும், துருவ் ஜூரல் 50 ரன்கள் எடுத்தனர்.
இதன் மூலம் 91 ஓவர் முடிவில் இந்திய ஏ அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 462 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி வீரர்கள் 9 பவுலர்களை பயன்படுத்தி இந்திய ஏ அணி விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்தனர். இது இரண்டே இரண்டு நாட்கள் நடைபெறக்கூடிய ஆட்டம் என்பதால் போட்டி சமனில் முடிந்தது.