தோஹா: செவ்வாய்க்கிழமை நடந்த ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைத் தொடரில், ஓமன் 'ஏ' அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 'ஏ' அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. வைபவ் சூர்யவன்ஷி இந்தப் போட்டியில் ஏமாற்றம் அளித்தார். "வைபவ் போனால் என்ன? நான் இருக்கிறேன்" என ஹர்ஷ் துபே நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார்.
ஹர்ஷ் துபேவின் ஆட்டம் இந்திய அணியின் வெற்றியில் முக்கியப் பங்காற்றியது. ஏற்கெனவே பாகிஸ்தான் 'ஏ' அணியிடம் தோல்வியைச் சந்தித்திருந்த இந்தியா 'ஏ' அணி, இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது.

சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்தியா 'ஏ' அணி, ஓமன் 'ஏ' அணியை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுக்க மட்டுமே அனுமதித்தது. இதில், குர்ஜன்ப்ரீத் சிங் மற்றும் சுயாஷ் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்துக் களமிறங்கிய ஜிதேஷ் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, தங்களது பேட்டிங் பலத்தை நிரூபிக்கும் வகையில், 17.5 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக எட்டியது. 4 ரன்களில் கேட்சைக் கோட்டைவிட்டதால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்த தவறிய துவக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 13 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மற்றொரு துவக்க வீரரான பிரியான்ஷ் ஆர்யா 6 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். நமன் திர் (19 பந்துகளில் 30 ரன்கள்) சில அதிரடி ஷாட்டுகளை ஆடிய நிலையில், ஹர்ஷ் துபே (44 பந்துகளில் 53 ரன்கள், ஆட்டமிழக்காமல்) மற்றும் நேஹல் வதேரா (24 பந்துகளில் 23 ரன்கள்) ஆகியோர் வெற்றியை உறுதி செய்தனர். பின் வரிசையில் ஆடும் ஹர்ஷ் துபே, 4-ம் வரிசைக்கு உயர்த்தப்பட்ட நிலையில் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார்.
இந்தியா 'ஏ' அணி அரையிறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 'குரூப் ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த அணியைச் சந்திக்க உள்ளது. அதே நாளில், பாகிஸ்தான் 'ஏ' அணியும் தங்களது அரையிறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளும் நவம்பர் 23-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.