ராஞ்சி: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க ஏ அணி இரண்டு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது.
இதில் இந்திய அணியில் பல ஸ்டார் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். கேப்டனாக திலக் வர்மா, துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட், அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், ரியான் பராக், பிராப்சிம்ரன் சிங், கலில் அகமத், ஆர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா உள்ளிட்ட பிரபல வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் வரும் 30ஆம் தேதி தென்னாப்பிரிக்க சீனியர் அணிக்கு எதிரான மூன்று சர்வதேச ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைக்கும்.
இதனால் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்த தீவிரமாக முயற்சி செய்வார்கள். பலம் வாய்ந்த வீரர்கள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளதால், இந்த போட்டியை நேரலையில் ஒளிபரப்ப பிசிசிஐ ஏற்பாடு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. அதன்படி இந்த போட்டிகள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் காணலாம் என்று முதலில் தேரிவிக்கப்பட்டது.
ஓடிட்டியில் ஜியோ ஹாட்ஸ்டார் இல் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது இந்த இரண்டிலும் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. இது ரசிகர்களை விரக்தி அடைய செய்துள்ளது. ஸ்டார் டீவீரர்கள் விளையாடும் போட்டியை கூட பிசிசிஐ ஒளிபரப்பு செய்யாதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் எல்லாம் சின்ன, சின்ன தொடரை ஒளிபரப்பு செய்யும் நிலையில், உலகின் மிகப் பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பான பிசிசிஐக்கு என்ன கேடு வந்தது என்று ரசிகர்கள் சாடியுள்ளனர். மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரும் ராஞ்சியில் நடைபெறுகிறது இரண்டாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாவது ஒருநாள் போட்டி நவம்பர் 19ஆம் தேதி புதன்கிழமையும் நடைபெற உள்ளது.