பெங்களூரு: தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி சேர்க்கப்படவில்லை.
சமி தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்தது மட்டுமல்லாமல் கடந்த மூன்று ரஞ்சிப் போட்டியில் பங்கேற்று 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.இதில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டும், இன்னொரு இன்னிங்சில் நான்கு விக்கெட்டும் அடங்கும்.

இப்படி இருந்தும் ஷமி இந்திய அணியில் சேர்க்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் இந்திய ஏ அணி மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணிக்காக விளையாடும் பிரதான வீரர்கள் அனைவரும் பங்கு பெற்றிருந்தனர்.
குறிப்பாக பந்துவீச்சில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ் என சீனியர் அணிகளுக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் இருந்தனர். இந்த தருணத்தில் கடைசி இன்னிங்ஸில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு 417 ரன்களை இலக்காக நிர்ணயித்தந்தது.
ஆனால் இந்திய ஏ அணி வீரர்கள் வீசிய பந்துவீச்சை சுக்குநூறாக உடைத்த தென்னாபிரிக்க ஏ அணி வீரர்கள் வெறும் 98 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டி அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள். இந்திய பந்துவீச்சில் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஒரு அளவுக்கு திருப்திகரமாக பந்து வீசினார்கள்.
ஆனால் ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ் ஆகியோர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.இதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முகமது ஷமியை தேர்வு குழுவினர் ஓரம் கட்டி வரும் நிலையில் தற்போது தென்னாபிரிக்காவின் இளம் வீரர்கள் கூட இந்தியாவின் சீனியர் பந்துவீச்சை அடித்து நொறுக்கி விட்டதாக ரசிகர்கள் குறை கூறியுள்ளனர்.
ஷமி போன்ற ஒரு வீரர் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் அவரை அணியில் சேர்க்காததற்கு நல்ல பாடத்தை தேர்வு குழுவினர் கற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் சாடியுள்ளனர். இதனால் ஆகாஷ் தீப்பை நீக்கி விட்டு ஷமியை சேர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.