பெங்களூர்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க ஏ அணி இரண்டு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கியது.
வரும் 14ஆம் தேதி இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதால், அதற்கு தயாராகும் விதமாக இந்த போட்டியில் ராகுல், சாய் சுதர்சன்,ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், ஆகாஷ் தீப்,முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் பங்கேற்றனனர்.

இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய அபிமன்யு ஈஸ்வரன் வெறும் 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு டக் அவுட்டானார்.
இதை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ராகுல், சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்து விளையாடினர். இதில் ராகுல் 40 பந்துகளை எதிர் கொண்டு 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாய் சுதர்சன் 52 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 17 ரன்கள் மட்டுமே சேர்த்தார். நடுவரிசையில் விளையாடிய தேவுதட் படிக்கல் ஐந்து ரன்களில் ஆட்டம் இழக்க பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். ஒரு கட்டத்தில் இந்திய ஏ அணி தடுமாறிய நிலையில் மறுமுனையில் அபாரமாக விளையாடிய துருவ் ஜூரல், தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். 75.2 ஓவர் முடிவில் இந்திய ஏ அணி 255 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று துருவ் ஜூரல் 175 பந்துகளில் 132 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும்.
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் இந்த போட்டி நடைபெறும் நிலையில் ராகுல், சாய் சுதர்சன், படிக்கல், ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங்கில் தடுமாறியது. இது ரசிகர்களை சோகம் அடைய வைத்திருக்கிறது. எனினும் துருவ் ஜூரல் சதம் அடித்திருப்பதால் அவர் மெயின் அணியில் இடம் பெறுவார் என தெரிகிறது. இதன் காரணமாக சாய் சுதர்சன் இடத்திற்கு ஆபத்து ஏற்படலாம்.