மும்பை: தென்னாபிரிக்க ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வலுவான நிலையில் உள்ளது. மேலும் பேட்டிங்கில் அபிமன்யு ஈஸ்வரன் முதல் இன்னிங்ஸிலும், டக் அவுட்டாகிய நிலையில், இரண்டாவது இன்னிங்சிலும் டக் அவுட் ஆகி ரசிகர்களை வெறுப்படைய வைத்திருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி துருவ் ஜூரலின் அபார சதத்தால் 255 ரன்கள் எடுத்தது.

இதை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க ஏ அணியின் டாப் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழ்ந்தனர். எனினும் தொடக்க வீரர் ஜோர்டன் ஹெர்மான் 26 ரன்களில் வெளியேற கேப்டன் மார்கஸ் அக்கர்மேன் அதிரடியாக விளையாடி 118 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். இதில் 17 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும்.
எனினும் மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. இதன் காரணமாக அந்த அணி 47.3 ஓவரில் 221 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளையும், சிராஜ் ஆகாஷ் தீப் தலா இரண்டு விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார்.
இதை அடுத்து 34 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய ஏ அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் அபிமன்யூ ஈஸ்வரன் மீண்டும் டக் அவுட் ஆகி ரசிகர்களை வெறுப்படைய வைத்தார். மூன்றாவது வீரராக விளையாடிய சாய் சுதர்சன் 38 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 23 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
எனினும் இதில் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். இதேபோன்று பேட்டிங் வரிசையில் நான்காவது வீரராக களம் இறங்கிய தேவுதட் படிக்கல் 42 பந்துகள் எதிர்கொண்டு 24 ரன்கள் எடுத்தார். இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் ராகுல் 57 பந்துகளை எதிர் கொண்டு 26 ரன்களுடனும் களத்தில் உள்ளார். நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய குல்தீப் யாதவ் களத்தில் இருக்கின்றார். இந்திய ஏ அணி தற்போது 24 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருக்கிறது. இது தென்னாப்பிரிக்க ஏ அணியை விட 112 ரன்கள் கூடுதலாகும்.