டர்பன் : இந்தியா ஏ அணியில் இடம் பிடித்து ஆடு வரும் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இந்தியா ஏ அணி வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடன், இந்தியா ஏ அணியும் சென்றுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா இந்தியா ஏ அணியிலும் இடம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில்,தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான போட்டியில், இந்தியா ஏ அணி ஆடியது. அந்தப் போட்டியில் பிரசித் கிருஷ்ணா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். மேலும், 5 விக்கெட் வீழ்த்தி தன் திறமையை நிரூபித்தார்.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ரூபின் ஹெர்மான் 95 ரன்கள் குவித்தார். ஜீன் டுப்ளேசிஸ் சதம் கடந்து 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணி 5 விக்கெட்கள் இழந்து 309 ரன்கள் எடுத்து ஆடி வந்தது. அப்போது பிரசித் கிருஷ்ணா வரிசையாக கடைசி 5 விக்கெட்களை 9 ஓவர்கள் இடைவெளியில் வீழ்த்தினார். அதில் கடைசி மூன்று விக்கெட்களை ஹாட்ரிக் விக்கெட்களாக வீழ்த்தி சாதனை படைத்தார். தென்னாப்பிரிக்கா ஏ அணி 319 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.
18.1 ஓவரில் 43 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார் பிரசித் கிருஷ்ணா. வெளிநாட்டு மண்ணில் இந்தியா ஏ அணி சார்பில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் பிரசித் கிருஷ்ணா. மேலும், வெளிநாட்டு மண்ணில் முதல்தர டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஆறாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
முன்னதாக சிஎஸ் நாயுடு, சி.ஆர் ரங்காச்சாரி, ரமேஷ் டிவேச்சா ஆகியோர் முதல் தர போட்டிகளில் இந்தியன்ஸ் அணிக்காக ஆடி, இங்கிலாந்து உள்ளூர் அணிகளுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் சாதனை செய்துள்ளனர். இர்பான் பதான் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், பும்ரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி உள்ளனர். இந்த ஐந்து பேருக்கு பின் முதல் தர டெஸ்ட் போட்டியில் பிரசித் கிருஷ்ணா, தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்க மண்ணில் ஹாட்ரிக் விக்கெட் சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.