மும்பை: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கின்றார். பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜார்டன் 71 ரன்களும், ஜுபைர் ஹம்ஸா 66 ரன்களிலும், ரூபின் ஹர்மான் 54 ரன்களிலும் தென்னாப்பிரிக்க ஏ அணி முதல் இன்னிங்ஸில் 309 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய ஏ அணியின் இடம்பெற்றுள்ள தனுஷ் கோட்டியான் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இதனை அடுத்து இந்திய ஏ அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது. இதில் தொடக்க வீரராக சாய் சுதர்சன், சிஎஸ்கே அணியின் இளம் தொடக்க வீரரான ஆயுஸ் மாத்ரேவும் களமிறங்கினர். இதில் ஆயுஷ் மாத்ரே தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். பத்து பவுண்டரிகளை அடித்த அவர் 76 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார்.
மறுமுனையில் சாய் சுதர்சன் 94 பந்துகளை எதிர்கொண்டு 32 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 3வது வீரராக களமிறங்கிய தேவுதட் படிக்கல் 22 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இதைப்போன்று ஆர்சிபி அணியின் கேப்டனான ரஜத் பட்டிதார் 35 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்கள் எடுத்தார். நடுவரிசையில் களமிறங்கிய ரிஷப் பண்ட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதில் ரிஷப் பன்ட் அதிரடியாக ஆட முற்பட்டு இரண்டு பவுண்டரிகளை அடித்தார். 20 பந்துகளில் அவர் 15 ரன்கள் மட்டுமே சேர்த்தார். சற்று முன்பு வரை இந்திய ஏ அணி 42 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்னும் இந்திய ஏ அணி தென்னாபிரிக்க ஏ அணியை விட 146 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. களத்தில் தற்போது ஆயுஷ் பதோனி மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகியோர் விளையாடி வருகின்றனர். தென்னாப்பிரிக்கா ஏ அணியில் பிரனாலன் சுப்புராயன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.