பெங்கஞர்: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி அரை சதம் கடந்துள்ளார். இன்னும் ஒரு நாள் போட்டி எஞ்சி உள்ள நிலையில் இந்திய ஏ அணியின் வெற்றிக்கு 156 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க ஏ அணியில் ஜார்டன் 71 ரன்களும், ஜுபைர் ஹம்ஸா 66 ரன்களும், ரூபின் அரைசதம் எடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க ஏ அணி முதல் இன்னிங்ஸ் 309 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து இந்திய ஏ அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே 65 ரன்கள் எடுக்க, சாய் சுதர்சன் 32 ரன்கள் எடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பந்த் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். அயூஸ் பதோனி 38 ரன்கள் எடுக்க இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 58 ஓவர் முடிவில் 234 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
73 ரன்கள் முன்னிலை பெற்ற தென்னாப்பிரிக்க ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 199 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜுபைர் மற்றும் லீஸ்கோ தலா 37 ரன்கள் எடுத்தனர். இந்திய ஏ அணியின் பந்துவீச்சு தரப்பில் தனுஷ் கோட்டியான் இரண்டாவது இன்னிங்ஸிலும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனை அடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய ஏ அணி களமிறங்கியது.
இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய சாய் சுதர்சன் 12 ரன்களிலும், ஆயுஸ் மாத்ரே 6 ரன்களிலும், தேவுதட் படிக்கல் ஐந்து ரன்களிலும் ஆட்டம் இழ்ந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜத் பட்டிதார் 28 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி தடுமாறிய நிலையில், ரிஷப் பன்ட் மட்டும் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.
எட்டு பவுண்டரி, 2 சிக்சர் என பட்டையை கிளப்பி அவர் 81 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். மூன்றாவது நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய ஏ அணி 39 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு 156 ரன்களும், தென்னாப்பிரிக்கா ஏ அணியின் வெற்றிக்கு ஆறு விக்கெட்டுகளும் உள்ளது.