பெங்களூர்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க ஏ அணி இரண்டு நான்கு நாள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்திய ஏ அணியில் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விலகிய ரிஷப் பண்ட் தற்போது மூன்று மாத ஓய்வுக்கு பிறகு சர்வதேச போட்டிக்கு திரும்பிருக்கின்றார்.இந்திய ஏ அணியில் சாய் சுதர்சன், தேவுதட் படிக்கல், ரஜத் பட்டிதார்.

ஆயுஷ் மாத்ரே, ஆயுஸ் பதோனி, அன்சூல் காம்போஜ், கலில் அகமத் உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய ஏ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர் லீஸ்கோ டக் அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரரான ஜார்டன் ஹெர்மன் 71 ரன்கள் எடுத்தார்.
மூன்றாவது வீரராக சுபைர் ஹம்ஸா 66 ரன்களும், மார்க்கஸ் அகர்மன் 18 ரன்களும் எடுத்தனர். இது போன்ற மற்றொரு நடுவரிசை வீரரான ரூபின் ஹெர்மான் 54 ரன்களும்,ரிவால்டோ முனுசாமி 5 ரன்களும் எடுக்க இறுதியில் டியான் 46 ரன்கள் எடுத்தார்.தற்போது தென்னாப்பிரிக்க ஏ அணி 9 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்திருக்கிறது.
இந்திய ஏ அணியின் பந்துவீச்சு தரப்பில் தனுஷ் கோட்டியான் 23 ஓவர்கள் வீசி 83 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு சுழற் பந்துவீச்சாளரான மனாவ் சுதர் 20 ஓவர் வீசி 62 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தினார். சிஎஸ்கே வீரர்கள் கலில் அகமத் மற்றும் அன்சூல் காம்போஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
நாளை இந்திய ஏ அணி பேட்டிங் செய்யும்போது ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், படிக்கல், ரஜத் பட்டிதார் உள்ளிட்ட வீரர்கள் பேட்டிங் செய்வார்கள் என்பதால் இந்த போட்டியில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த போட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம்.