IND A vs SL A: இந்தியாவுக்கு ஒரு சூப்பர் பவுலர் கிடைச்சிட்டாரு.. 2வது டெஸ்ட்டில் அபார வெற்றி
காலே: இலங்கை ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில், துருவ் ஜூரெல் தலைமையிலான இந்தியா ஏ அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா ஏ அணி கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நான்காவது நாளான இன்று, வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் ப்ராரின் அபாரமான பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை (6/68) வீழ்த்திய அவர், ஒட்டுமொத்த ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியா ஏ அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தார்.

இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸை 209 ரன்களுக்குள் சுருட்டியதன் மூலம், இந்திய அணிக்கு வெறும் 33 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டியது. முன்னதாக, தங்களது முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ஏ அணி, யாஷ் தாக்கூர் 2 ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து 143.3 ஓவர்களில் 543 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் பேட்டிங் செய்ய களம் இறங்கவில்லை. இதனால், 175 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை ஏ அணிக்கு ஆரம்பத்திலேயே பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. வெறும் 9 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது. குர்னூர் ப்ரார் வீசிய பந்துகளில் நுவனித பெர்னாண்டோ (5 ரன்கள்), சோஹன் டி லிவேரா (2 ரன்கள்) ஆகியோரும், ஆகிப் நபி பந்துவீச்சில் பவந்த வீரசிங்க (1 ரன்) ஆகியோரும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கேப்டன் சஹான் ஆராச்சிகே 10 ரன்கள் எடுத்திருந்தபோது, யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் தேவ்தத் படிக்கலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இலங்கை அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது களம் இறங்கிய அஷேன் பண்டாரா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவர் 86 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்து குர்னூர் ப்ரார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அஞ்சல பண்டாரா 17 ரன்களும், திலுவா சுதீர 21 ரன்களும் எடுத்து ஓரளவிற்கு உதவினர். இறுதியில் இலங்கை ஏ அணி 48.3 ஓவர்களில் 209 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் குர்னூர் ப்ரார் 12.3 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி பெற 33 ரன்கள் மட்டுமே தேவை என்ற எளிய இலக்குடன் இந்திய தொடக்க வீரர்களான சாய் சுதர்சன் மற்றும் அமன் மொகாதே ஜோடி களமிறங்கியது.
சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி துலாஜ் சமுதிதா வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விரட்டினார். இறுதியில், 6.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்து இந்தியா ஏ அபார வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 25* ரன்களுடனும், அமன் மொகாதே 11* ரன்களுடனும் களத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


Click it and Unblock the Notifications

