இந்தியாவுக்கு எதிராக இலங்கை சரியான மைண்ட் கேம் ஆடிவிட்டது.. தம்புள்ளா சர்ச்சை குறித்து அஸ்வின் பதிவு
சென்னை: இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் வைபவ் சூரியவன்ஷி ஆத்திரமடைந்தது குறித்து, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது முக்கியமான கருத்தைப் பகிர்ந்துள்ளார். தம்புள்ளாவில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு தொடரின் லீக் ஆட்டம் 265 ரன்களுடன் டையில் முடிந்தது.
அதன்பின் போதிய வெளிச்சமின்மையால் சூப்பர் ஓவர் நடத்துவதில் பெரும் இழுபறி ஏற்பட்டது. கேப்டன் திலக் வர்மா நடுவர்களிடம் ஆக்ரோஷமாகப் பேசி சூப்பர் ஓவரை நடத்தினார். பின்னர், இலங்கை பேட்டிங் செய்த போது கடைசி பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டது மற்றும் ஆட்டம் முடிந்ததும் 15 வயது வைபவ் சூரியவன்ஷி இலங்கை வீரரை நெஞ்சில் தள்ளி மோதலில் ஈடுபட்டது என மைதானமே போர்க்களமாக மாறியது.

இந்த வன்முறை மற்றும் சர்ச்சை குறித்து அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "இந்த போட்டிகளில் ஐபிஎல் தொடரைப் போல அதிகமான கேமராக்கள் இருப்பதில்லை. சூப்பர் ஓவரில் நடுவர்கள் அறிவித்த நோ-பால் முடிவு விவாதத்திற்குரியது. அதே நேரத்தில், சூப்பர் ஓவர் பேட்டிங்கிற்கு வர இலங்கை அணி வேண்டுமென்றே தாமதம் செய்தது இந்திய வீரர்களை மிகவும் கோபப்படுத்தியது.
இந்திய அணியினர் காட்டிய இந்த ஆத்திரமும் ஏமாற்றமும் புரிந்து கொள்ளக்கூடியதுதான். ஆனால், இலங்கை அணி இங்கு மிகச் சரியான முறையில் 'மைண்ட் கேம்' விளையாடியுள்ளது. ஒரு சிறந்த நாடகத்தைப் பார்த்தது போல இருந்தது" என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
இப்போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் விப்ராஜ் நிகாம் பிட்ச்சின் ஆபத்தான பகுதியில் ஓடியதால் இந்தியாவுக்கு 10 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த 10 ரன்களே இறுதியில் ஆட்டம் டையில் முடிவதற்கும், இந்தியாவின் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
சடீரா சமரவிக்ரமாவின் 93 ரன்கள் ஆட்டத்தால் இலங்கை அணி ஆட்டத்தை டை செய்து, இறுதியில் சூப்பர் ஓவரில் வெற்றியும் பெற்றது. இந்த அசாத்திய வெற்றி மூலம் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.


Click it and Unblock the Notifications
