IND A vs SL A: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் செய்த செயல்.. அகர்கர் கண்முன்னே கம்பீர், டிராவிட் சாதனை சமன்
தம்புள்ளா: இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் மற்றும் தற்போதைய இந்திய அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரின் சாதனைகளை சமன் செய்து இருக்கிறார். அதிலும் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் கண்முன்னே இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் 'ஏ' அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரிலும் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் சேர்க்கப்படவில்லை. ஆனால் ரியான் பராக் காயமடைந்ததால் அதிர்ஷ்டவசமாக இந்திய 'ஏ' அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ருதுராஜ், இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான ஆட்டத்தில் அபார சதம் விளாசி, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார்.

தம்புள்ளாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய 'ஏ' அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆரம்பத்திலேயே தடுமாறியது. வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் களமிறங்கிய ருதுராஜ், அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பை ஏற்றார். அவருடன் ஆடிய பிரியான்ஷ் ஆர்யா ரன் அவுட் ஆனாலும், அடுத்து வந்த திலக் வர்மாவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். திலக் வர்மா 52 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் சேர்க்க திணறிய நிலையில், ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டு தொடர்ந்து ரன் சேர்த்தார்.
மிகவும் பொறுப்புடன் ஆடிய ருதுராஜ் 111 பந்துகளில் தனது சதத்தை நிறைவு செய்தார். மொத்தம் 114 பந்துகளை சந்தித்த அவர் 101 ரன்கள் எடுத்திருந்தபோது, சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் ஆனார். இது உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை உள்ளடக்கிய 'லிஸ்ட் ஏ' கிரிக்கெட்டில் ருதுராஜ் அடிக்கும் 21வது சதமாகும். இதன் மூலம் முன்னாள் இந்திய ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
டிராவிட் 416 இன்னிங்ஸ்களிலும், கம்பீர் 292 இன்னிங்ஸ்களிலும் 21 சதங்களை அடித்த நிலையில், ருதுராஜ் தனது 96வது இன்னிங்ஸிலேயே இந்த பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ருதுராஜ் சதம் அடித்தபோது தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மைதானத்தில் இருந்து போட்டியை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார். ருதுராஜ் கடைசியாக இந்திய அணிக்காக விளையாடிய ஒருநாள் போட்டியிலும் அபாரமாக சதம் அடித்திருந்தார்.
எனினும், காயத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பியதால் ருதுராஜுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் ஆதிக்கம் செலுத்துவதாலும், துவக்க வீரர் இடத்திற்கு ஜெய்ஸ்வால் போட்டியிடுவதாலும் ருதுராஜுக்கு அணியில் இடம் கிடைப்பதில் கடும் சிக்கல் நிலவுகிறது. ஆனாலும், தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தொடர்ந்து ரன்களை குவித்து இந்திய அணியின் கதவை மிக வலுவாக தட்டியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட்.


Click it and Unblock the Notifications
