துபாய்: எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக ஏ அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ஏ அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
எமர்ஜிங் ஆசியக் கோப்பை தொடரின் 8வது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் ஏ அணியை எதிர்த்து இந்தியா ஏ அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் ஏ அணியின் கேப்டன் பேசில் ஹமீது பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் அர்யன்ஷ் சர்மா - மயங்க் ராஜேஷ் குமார் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி தரப்பில் இளம் வீரர் அன்சுல் கம்போக் முதல் ஓவரை வீசினார்.

அந்த ஓவரின் கடைசி பந்தில் அதிரடியாக ஆடிய மயங்க் ராஜேஷ் குமாரை 10 ரன்களில் வீழ்த்தி வெளியேற்றினார். தொடர்ந்து 2வது வைபவ் அரோரா வீசிய 2வது ஓவரில் அர்யன்ஷ் சர்மா 1 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ராகுல் சோப்ரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் மறுமுனையில் வந்த நிலான்ஷ் 5 ரன்களிலும், விஷ்ணு சுகுமாரன் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவிலேயே ஐக்கிய அரசு அமீரக அணி 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ராகுல் சோப்ரா - பேசில் ஹமீது கூட்டணி இணைந்து ஐக்கிய அரபு அமீரக அணியின் ஸ்கோரை நிதானமாக விளையாடி உயர்த்தினர். சிறப்பாக ஆடிய பேசில் ஹமீது 12 பந்துகளில் 2 சிக்ஸ், 1 பவுண்டரி உட்பட 22 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் சோப்ரா 50 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் 16.5 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரக அணி 107 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ரஷித் சலாம் 3 விக்கெட்டுகளையும், ரமன்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி பிரப்சிம்ரன் சிங் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் 8 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் கேப்டன் திலக் வர்மா களம் புகுந்தார்.
ஆனால் ஆட்டத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் அபிஷேக் சர்மா எடுத்து கொண்டார். கேப்டன் பேசில் ஹமீது வீசிய 2வது ஓவரிலேயே அபிஷேக் சர்மா 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 22 ரன்களை விளாசினார். பின்னர் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி பறக்க, பவர் பிளே ஓவர்கள் முடிவிலேயே இந்திய அணி 74 ரன்களை எட்டியது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரைசதம் விளாசினார். பின்னர் திலக் வர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அபிஷேக் சர்மாவும் 24 பந்துகளில் 4 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக களமிறங்கிய நேஹல் வதேரா - ஆயுஷ் பதோனி கூட்டணி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. வெறும் 10.5 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் காரணமாக குரூப் பி பிரிவில் இந்திய அணி 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.