அனந்தபூர்: இந்திய அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மோசமான பவுலிங்கால் தனது வாய்ப்புக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இந்திய அணி அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதற்கு முன்னதாக துலீப் ட்ராபி உள்ளூர் டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணி வீரர்களை பங்கேற்கச் செய்து அவர்கள் செயல்பாட்டை கண்காணித்து வருகிறது பிசிசிஐ.
துலீப் டிராபி டெஸ்ட் தொடர் கடந்த வியாழன் அன்று துவங்கியது. அதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதிய போட்டி அனந்தபூரில் நடைபெற்றது. இந்தியா பி அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது இந்தியா பி அணி. அந்த அணியில் இடம் பெற்று இருந்த இளம் வீரர் முஷீர் கான் அபாரமாக ஆடி சதம் அடித்தார். குல்தீப் யாதவின் மோசமான பந்து வீச்சு முஷீர் கான் எளிதாக சதம் அடிக்க உதவியது.

94 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்த இந்தியா பி அணி, முஷீர் கான் அடித்த சதம் மற்றும் 9வது வரிசை வீரர் நவ்தீப் சைனியின் தடுப்பாட்டத்தால் 202 ரன்கள் வரை குவித்து உள்ளது. இரண்டாம் நாள் அன்று மேலும் ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது. இந்தியா ஏ அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் எல்லாம் சிக்கனமாக பந்து வீசியும், விக்கெட் வீழ்த்தியும் இருந்த நிலையில் இந்திய அணியில் இடம் பெற்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் உள்ள சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
அவர் 14 ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இந்தியா பி அணி 79 ஓவர்களில் 202 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதாவது ஒரு ஓவருக்கு 2.5 ரன்கள் மட்டுமே சராசரியாக எடுத்து இருந்தது அதனுடன் ஒப்பிடுகையில் குல்தீப் யாதவ் ஒரு ஓவருக்கு 3.57 ரன்கள் விட்டுக் கொடுத்து இருந்தார்.
முஷீர் கான், குல்தீப் யாதவின் அவரது ஓவர்களில் எளிதாக ரன் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய டெஸ்ட் அணியில் மூத்த சுழற் பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு அடுத்த முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார் குல்தீப் யாதவ். ஆனால், உள்ளூர் போட்டி ஒன்றில் சர்வதேச அனுபவம் இல்லாத 19 வயது வீரரான முஷீர் கானுக்கு எதிராக குல்தீப் யாதவ் சொதப்பி இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட பெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. தொடர்ந்து பத்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் குல்தீப் யாதவ் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார்.
வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பயிற்சி அளிக்கும் வகையில் துலீப் ட்ராபி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மோசமாக செயல்படும் இந்திய அணி வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம். அந்த வகையில் தனது இந்திய அணி வாய்ப்பையும் சிக்கலாக மாற்றிக் கொண்டுள்ளார் குல்தீப் யாதவ்.