14 வயது சூர்யவன்ஷி அபாரம்.. 6 சிக்சர், 5 பவுண்டரி அடித்து அசத்தல்.. ஆஸ்திரேலிய மண்ணில் அதிரடி
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர் 19 அணி அங்கு மூன்று ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அண்டர் 19 அணியில் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணியில் 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி, விஹான் மல்கோத்ரா உள்ளிட்ட வீரர்கள் விளையாடுகின்றனர்.
முதல் அண்டர் 19 ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சூரியவன்சி 22 பந்துகளில் 38 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த நிலையில் இரண்டாவது யூத் ஒரு நாள் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய அண்டர் 19 அணியில் தொடக்க வீரர் ஆயுஷ் மாத்ரே இரண்டு பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட்டானார். இதை அடுத்து, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த 14 வயது வீரரான வைபவ் சூர்யவன்சி, விஹான் மல்கோத்ரா ஆகியோர் அபாரமாக ரன்களை சேர்த்தனர்.
முதலில் கொஞ்சம் பொறுமையாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, பின்னர் தன்னுடைய வழக்கமான அதிரடியை காட்டினார். பிரிஸ்பேன் போன்ற ஆடுகளத்தில் கொஞ்சம் கூட பயமே இல்லாமல் ஐந்து பௌண்டரி, ஆறு இமாலய சிக்சர்களை அடித்து 68 பந்துகளில் 70 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதேபோன்று விஹான் மல்கோத்ராவும் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார்.
14 வயதே ஆன வைபவ் சூர்யவன்சி ஏற்கனவே இங்கிலாந்தில் 31 பந்துகளில் 86 ரன்களும், 78 பந்துகளில் 143 ரன்கள், 19 பந்துகளில் 48 ரன்களும், 34 பந்துகளில் 45 ரன்கள் அடித்து அசத்தி இருந்தார். பேட்டிங்கிற்கு கடினமான இங்கிலாந்து மண்ணில் அசத்திய அவர், தற்போது ஆஸ்திரேலியா மண்ணிலும் தொடர்ந்து பட்டையை கிளப்பி வருகிறார்.
இதனால் வைபவ் சூர்யவன்சியை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.அண்டர் 19 கிரிக்கெட்டில் வெறும் 14 வயதில் வைபவ் சூரியவன்சி ஜொலித்து வருகிறார். ஏற்கனவே அவர் ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 252 ரன்கள் அடித்திருந்தார். இதில் 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications