துபாய்: யு19 ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 13 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 3வது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சாட் பைக் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய உஸ்மான் கான் - ஷாசைப் கான் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சிறப்பாக ஆடிய ஷாசைப் கான் 147 பந்துகளில் 10 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 159 ரன்களை விளாசி அசத்தினார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சமர்த் நாகராஜ் 3 விக்கெட்டுகளையும், ஆயுஷ் மாத்ரே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன்பின் சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர்.
ஆயுஷ் மாத்ரே - வைபவ் சூர்யவன்ஷி இருவரும் தொடக்கம் கொடுக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 28 ரன்கள் சேர்த்த நிலையில் ஆயுஷ் மாத்ரே 20 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே 1 ரன்னில் வைபவ் சூர்யவன்ஷி வெளியேறினார். தொடர்ந்து வந்த தமிழக வீரர் ஆன்ட்ரே சித்தார்த் 15 ரன்களில் வெளியேற, இந்திய அணி 51 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் கேப்டன் முகமது அமான் - நிகில் குமார் கூட்டணி இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது. நிதானமாக ஆடிய கேப்டன் அமான் 16 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த வீரர்கள் நிகில் குமாருக்கு நல்ல கம்பெனி கொடுத்தனர். மிடில் ஆர்டர் வீரர்கள் விரைவாக ரன்கள் சேர்க்க, இந்திய அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது. அப்போது சிறப்பாக ஆடிய நிகில் குமார் 77 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அனி 190 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் கடைசி நேரத்தில் முகமது எனான் - குகா கூட்டணி இணைந்து வேகமாக ரன்களை குவித்தது. இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இறுதியாக இந்திய அணி 47.1 ஓவர்களில் 237 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில் அலி ரசா 3 விக்கெட்டுகளையும், அப்துல் மற்றும் ஃபஹன் உல் ஹக் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.