இந்தியாவுடன் படுதோல்வி அடைந்த உடன் விழுந்த அடுத்த அடி.. ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதிக்கு தண்டனை
சென்னை: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பிட்ச்சின் தடை செய்யப்பட்ட பகுதியில் ஓடி விதியை மீறிய ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்ததுடன், ஒரு 'டிமெரிட்' புள்ளியையும் வழங்கி தண்டித்துள்ளது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கின் போது, பந்துவீச்சாளர்கள் ஓடிவரும் பிட்ச்சின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஷாஹிதி அடிக்கடி ஓடினார். இதற்காக நடுவர்கள் அவருக்கு இருமுறை வாய்மொழி எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் ஆட்டத்தின் 31வது ஓவரில் அவருக்கு அதிகாரப்பூர்வமாக இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், 40வது ஓவரில் அவர் மீண்டும் அதே தவறைச் செய்ததால், அதிரடி நடவடிக்கையாக இந்திய அணிக்கு 5 பெனால்டி ரன்கள் போனஸாக வழங்கப்பட்டது.

போட்டி முடிந்த பிறகு, பிட்ச்சிற்கு வேண்டுமென்றே சேதம் விளைவித்ததாகக் கூறி ஐசிசி நடத்தை விதியின் 2.10.10 பிரிவின் கீழ் ஷாஹிதி மீது குற்றம் சாட்டப்பட்டது. மேட்ச் ரெப்ரி ரஞ்சன் மதுகல்லே விதித்த இந்த தண்டனையை ஷாஹிதி ஏற்றுக்கொண்டதால் முறையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. அவருக்கு அதிகாரப்பூர்வ கண்டனம் விதிக்கப்பட்டதோடு, ஒழுங்குமுறை நடவடிக்கையாக 1 டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் அவர் செய்த முதல் தவறு இதுவாகும்.
இப்போட்டியில் ஷாஹிதி மிகச் சிறப்பாக விளையாடி தனது முதல் ஒருநாள் சதத்தை (131 பந்துகளில் 102 ரன்கள்) பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி விதிமுறைகளின்படி, ஒரு வீரர் 2 ஆண்டுகளில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட டிமெரிட் புள்ளிகளைப் பெற்றால், அவர் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியே வென்றது. இதன் ,மூலம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3 - 0 என முழுமையாக கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் அணி தொடரை இழந்த கையோடு, கேப்டனுக்கு தண்டனையும் கிடைத்து பின்னடைவை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications
