பார்படாஸ் : இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவை பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே கூட கண்டுகொள்ள மாட்டார் என்றும், பும்ராவின் பவுலிங் குறித்து எந்த அணியில் யாரும் எந்த கருத்தையும் கூறவும் மாட்டோம் என்று அக்சர் படேல் தெரிவித்துள்ளார். பும்ராவின் செயல்பாடுகள் மீது இந்திய அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அக்சரின் கருத்து பார்க்கப்படுகிறது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு சூர்யகுமார் யாதவின் பேட்டிங் முக்கிய காரணமாக இருந்தாலும், பும்ராவின் பவுலிங் பலரையும் வியக்க வைத்துள்ளது. ஏனென்றால் பார்படாஸ் மைதானம் நியூயார்க் மைதானத்தை போல் பவுலர்களுக்கு சாதகமான பிட்ச் கிடையாது. இந்த பிட்சில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இணைந்து 181 ரன்கள் விளாசிய போதே, பேட்டிங் செய்ய முடியும் என்று கணிக்கப்பட்டது.

அப்படியான ஒரு பிட்சில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 20 டாட் பால்கள் உட்பட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். சராசரியாக ஒரு ஓவருக்கு 2 ரன்களை கூட பும்ரா விட்டுக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து அக்சர் படேல் பேசுகையில், பும்ரா எப்போதுமே உலகத்தரம் வாய்ந்த பவுலர். இந்திய அணி எவ்வளவு மோசமான சூழலில் இருந்தாலும், ஆட்டத்தை எளிதாக மாற்றும் வல்லமை கொண்டவர் பும்ரா.
இந்திய அணியின் பும்ராவின் பவுலிங்கை பற்றி யாரும் அவரிடம் பேச மாட்டார்கள். அவருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது நன்றாக தெரியும். ஒரு விஷயம் சரியாக நடக்கும் போது, பவுலிங் பயிற்சியாளர்கள் எந்த மாற்றத்தையும் அறிவுறுத்த மாட்டார். ஏனென்றால் அது பவுலரின் மூளையில் சில குழப்பத்தை ஏற்படுத்தும். இந்திய பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே, பும்ராவை தட்டிக் கொடுக்க மட்டுமே பேசுவார்.
பவுலர்களின் ஆலோசனையில் போது கூட பும்ராவிடம், உன் மனநிலை எப்படி இருக்கிறதோ, என்ன தோன்றுகிறதோ அதனை சரியாக செயல்படுத்து என்றே அறிவுறுத்துவார். எனது பவுலிங்கை பொறுத்தவரை மற்றவர்களின் பவுலிங்கை பார்க்க மாட்டேன். எனது திட்டம் என்ன, என்னுடைய ரோல் என்ன என்பதில் தான் கவனம் செலுத்துவேன். இந்த பிட்சில் 2 பந்துகளை வீசிய போது, ஸ்லோயர் பந்தை வீசினால் சரியாக இருக்கும் என்று கணித்தேன். அது பலம் கொடுத்தது என்று தெரிவித்துள்ளார்.