மும்பை: மனசோர்வு என்று காரணம் கூறி அணியில் இருந்து விடுவிக்கக் கோரிய இஷான் கிஷன், துபாயில் பார்ட்டியில் ஈடுபட்டது பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மை காலங்களில் இளம் வீரர் இஷான் கிஷன் தான் ஒவ்வொரு தொடருக்கு இந்திய அணியுடன் பயணித்து வந்துள்ளார். வங்கதேச சுற்றுப்பயணம், ஐபிஎல் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆசியக் கோப்பை, உலகக்கோப்பை, ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டி20 தொடர், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் என்று அத்தனை தொடர்களுக்கும் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் அவர் பிளேயிங் லெவனில் விளையாடிய போட்டிகள் என்றால் மிகவும் குறைவானது தான். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மற்றும் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் திறமையை நிரூபித்தும் இஷான் கிஷனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து பயணம் மற்றும் பயிற்சி என்று இஷான் கிஷன் ஈடுபட்டு வந்த நிலையில், உலகக்கோப்பை தொடருக்கு பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் தரப்பில் விடுப்பு கொடுக்க கோரிக்கை வைக்கப்பட்டும், அவரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அந்த டி20 தொடரில் கடைசி 2 போட்டிகள் இஷான் கிஷனுக்கு ஓய்வு வழங்கப்பட்டாலும், அவர் அணியுடனே பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்பின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு கோரியதோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டியுள்ளார். ஆனால் பிசிசிஐ காதில் வாங்காமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடுவித்தது. தொடர்ந்து விளையாடி வருவதால் மன சோர்வு அடைந்ததாக முன்வைத்த கோரிக்கையால், பிசிசிஐ அவரை விடுவித்தது.
இதன்பின் இந்தியா வந்த அவர் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து சில தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின் சகோதரரின் திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற அவர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி செய்துள்ளார். இந்த விவகாரம் பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. மனசோர்வால் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்று கூறிவிட்டு, துபாயில் பார்ட்டி செய்வது பிசிசிஐ நிர்வாகிகளால் ஏற்று கொள்ள முடியவில்லை.
இதனால் கோபமடைந்த பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் தேர்வு குழு, ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அவர் தேர்வு செய்யாமல் புறக்கணித்துள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடரிலும் கேஎல் ராகுல் மற்றும் கேஎஸ் பரத் இருவரும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இனி ஐபிஎல் தொடரில் தான் இஷான் கிஷன் களமிறங்குவார் என்று பார்க்கப்படுகிறது.