“ஒப்புக்கு சப்பாணி”.. ரசிகர்கள் திட்டியதால் டம்மியாக இந்திய அணியுடன் சேர்க்கப்பட்ட ஆகிப் நபி
மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, ரஞ்சி கோப்பை நாயகன் ஆகிப் நபியைப் பிரதான அணியில் எடுக்காமல், ரசிகர்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக வெறும் 'நெட் பவுலராக' (வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்) பிசிசிஐ சேர்த்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க ரசிகர்களை ஏமாற்றும் 'ஒப்புக்கு சப்பாணி' வேலை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் அணியின் வலதுகை வேகப்பந்து வீச்சாளரான 29 வயது ஆகிப் நபி, 2025-26 ரஞ்சி கோப்பையில் 60 விக்கெட்டுகளை (பந்துவீச்சு சராசரி 12.57) வீழ்த்தி தனது அணிக்கு முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க கோப்பையை வென்று கொடுத்தார். 41 முதல்தர போட்டிகளில் விளையாடி 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவரை, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 15 பேர் கொண்ட இந்திய அணியில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு சேர்க்கவில்லை. இவருக்குப் பதிலாக பஞ்சாப்பைச் சேர்ந்த குர்னூர் பிராருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

கொதித்தெழுந்த ரசிகர்கள்
முன்னாள் வீரர்களான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், திலிப் வெங்சர்க்கார் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ-யின் இந்த பாரபட்சமான முடிவைக் கடுமையாக விமர்சித்தனர். "உள்ளூர் போட்டிகளில் இவ்வளவு விக்கெட் எடுத்தும் வாய்ப்பு தரவில்லை என்றால் ரஞ்சி தொடரையே மூடிவிடுங்கள்" என மஞ்ச்ரேக்கர் ஆவேசப்பட்டார். இந்தத் தொடர் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், தற்போது ஆகிப் நபியை இந்திய அணியுடன் 'நெட் பவுலராக' மட்டும் பிசிசிஐ சேர்த்துள்ளது.
அகர்கரின் சப்பைக் கட்டு
இது குறித்துத் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் அளித்த விளக்கம் மிகவும் வேடிக்கையாக உள்ளது. "ஆகிப் நபி மிகச் சிறந்த சீசனைத் தந்துள்ளார். ஆனால் இந்திய ஆடுகளங்களில் டெஸ்ட் போட்டி நடக்கும் போது அதிக வேகப்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை" என்று சப்பைக் கட்டு கட்டியுள்ளார். அப்படியென்றால் அணியில் உள்ள மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை எப்படித் தேர்வு செய்தீர்கள் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.
டம்மியாக்கப்பட்ட ரஞ்சி நாயகன்
இந்திய அணியின் வலைப்பயிற்சியில் பேட்டர்களுக்குப் பந்துவீச உதவும் ஆறு நெட் பவுலர்களில் ஒருவராகத் தான் ஆகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார். ஜூன் 6-ம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டிக்கு சுப்மன் கில் கேப்டனாகச் செயல்படுகிறார். ரஞ்சியில் ஜம்மு காஷ்மீரைத் தனது தோளில் சுமந்து சாம்பியன் ஆக்கிய ஒரு வீரரை, பிரதான அணியில் எடுக்காமல் வலைப்பயிற்சிக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது உழைத்த வீரரை அவமானப்படுத்தும் செயல் என்று விமர்சகர்கள் சாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications

