பார்படாஸ் : ஆஃப்கானிஸ்தான் அணியின் துருப்புச்சீட்டான 2 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா வீழ்த்தி ஆட்டத்தை திருப்பியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் சிராஜ் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் கொண்டு வரப்பட்டார். இதனால் பும்ராவுக்கு கூடுதல் பொறுப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது.
அந்த பொறுப்பை பவர் பிளே ஓவர்களிலேயே பும்ரா நிறைவேற்றியுள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 53 ரன்களும், ஹர்திக் பாண்டியா 34 ரன்களும் விளாசினர். சிறப்பாக பவுலிங் செய்த ரஷீத் கான், ஃபரூக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சவாலான இலக்கு என்றாலும் ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் இந்திய அணி ரசிகர்களுக்கு பீதியை கொடுத்தது. ஏனென்றால் ஆஃப்கானிஸ்தான் தொடக்க வீரர் குர்பாஸ் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அசாத்திய ஃபார்மில் இருக்கிறார். ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக 56 பந்துகளில் 80 ரன்களும், உகாண்டா அணிக்கு எதிராக 45 பந்துகளில் 76 ரன்களும் விளாசியுள்ளார்.
4 போட்டிகளில் விளையாடிய அவர், 167 ரன்களை விளாசி இருந்தார். இதனால் குர்பாஸ் விக்கெட்டை விரைந்து வீழ்த்த வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருந்தது. அதற்கேற்ப அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 13 ரன்களை விளாசி மிரட்டினார். இதனால் உடனடியாக 2வது ஓவரை வீச பும்ரா அழைக்கப்பட்டார்.
குர்பாஸ் லெக் சைட் திசையில் பலமான வீரர் என்பதை அறிந்த பும்ரா, முதல் பந்தை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வீசினார். இதன்பின் 2வது பந்தை கொஞ்சம் வேகத்தை குறைத்து ஒய்டாக மீண்டும் ஆஃப் ஸ்டம்ப் வெளியில் வீச, அந்த பந்தை அடிக்க முயன்று குர்பாஸ் எட்ஜாகினார். இதனால் ரிஷப் பண்ட் எளிதாக கேட்ச் பிடிக்க, குர்பாஸ் 11 ரன்களில் பரிதாபமாக வெளியேறினார்.
இதன்பின் 5வது ஓவரை வீச அழைக்கப்பட்ட பும்ரா, முதல் பந்திலேயே ஹஸ்ரத்துல்லா 2 ரன்களில் வீழ்த்தி வெளியேற்றினார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆஃப்கானிஸ்தான் அணியின் 2 முக்கிய விக்கெட்டுகளையும் பவர் பிளே ஓவர்களுக்குள் பும்ரா வீழ்த்தியது இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றுள்ளது.