ரோஹித் அதிர்ச்சி
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ரோஹித் சர்மா 10 பந்துகளில் 1 ரன் எடுத்து வெளியேறினார். அது தான் முதல் அதிர்ச்சி. அதன் பின் கோலி தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சுழற் பந்துவீச்சை சமாளிக்க திணறினர்.
மோசமான பேட்டிங்
கோலி 67, ஜாதவ் 52 ரன்கள் குவித்தனர், மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் தாக்குப் பிடித்து ஆடினாலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. தோனி படு மோசமாக ஆடி 52 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார்.
விஜய் ஷங்கர் எடுத்த ரன்கள்
விஜய் ஷங்கர் இந்தப் போட்டியில் 41 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். 2 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில் களமிறங்கிய அவர் நிதானமாக ரன் குவித்தார். அதனால், ஸ்ட்ரைக் ரேட் 70-ஐ ஒட்டியே இருந்தது.
ரிஷப் பண்ட் ரசிகர்கள்
இதைப் பிடித்துக் கொண்டார்கள் ரிஷப் பண்ட் ரசிகர்கள். ஆப்கானிஸ்தான் போன்ற சிறிய நாட்டிற்கு எதிராக அரைசதம் அடிக்க முடியாத இவரை விட ரிஷப் பண்ட் மேல். விஜய் ஷங்கரை தூக்கி விட்டு பண்ட்டை களமிறக்க வேண்டும் என போர்க் கொடி தூக்கினர்.
தோனியை விட அதிகம்
இது என்னடா அநியாயம் என்பதை போல தான் இருந்தது அவர்களின் வாதம். காரணம், இந்திய அணியில் இருவரை தவிர எல்லோரும் ஆப்கன் அணியிடம் திணறி உள்ளனர். ரோஹித், தோனியை விட விஜய் ஷங்கர் நன்றாகவே ஆடினார்.
நீக்க வேண்டும்
ஆனால், ஒட்டு மொத்தத்தில் சராசரி என்று சொல்லலாம். அதை வைத்தே அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என கூறி வருகின்றனர் ரிஷப் பண்ட் ரசிகர்கள். ரிஷப் பண்ட் வந்தால் என்ன செய்வார்?
என்ன செய்வார் பண்ட்?
ரிஷப் பண்ட்டை பொறுத்தவரை அதிரடியாக அடிப்பார்.. அல்லது ஆட்டமிழந்து நடையைக் கட்டுவார். வெறும் சிங்கிள் எடுப்பது எல்லாம் அவர் லிஸ்டிலேயே இல்லை. விஜய் ஷங்கர் தொடர்ந்து சிங்கிள் எடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறார். தேவைப்பட்டால் அதிரடியாகவும் அடிப்பார் என்பதாலேயே ரிஷப் பண்ட்டை காட்டிலும் அணியில் தேர்வு செய்யப்படுகிறார்.