சவுதாம்ப்டன்: சவுதாம்ப்டன் நகரின் ரோஸ் பவுல் மைதானத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிக்கு முந்தைய நாள் இந்திய அணி பயிற்சியில் ஈடுபடவில்லை. பாகிஸ்தான் போட்டிக்கு பின் இரண்டு நாள் ஓய்வு எடுத்துக் கொண்ட இந்திய வீரர்கள், அடுத்த இரண்டு நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட்டு இந்தியா இந்த முடிவை எடுக்கவில்லை. உலகக்கோப்பை போன்ற நீண்ட தொடர்களில் பங்கேற்கும் போது அதிக பயணம் செய்ய வேண்டி இருக்கும். இது போன்ற சூழ்நிலையில், பயிற்சிக்கும், ஓய்வுக்கும் இடையே ஆன சமநிலையை வீரர்கள் கையாள வேண்டியது அவசியம்.
ஜூன் 9 அன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெற்ற வெற்றிக்கு பின் இந்தியா ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடி உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது. அப்போது இந்திய வீரர்கள் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது தான் மிச்சம்.
கடந்த 12 நாட்களாக இந்திய அணி உள் அரங்குகளில் தான் பெரும்பாலும் பயிற்சி மேற்கொண்டது. கிடைத்த சில வாய்ப்புகளிலும் அதிக நேரம் பயிற்சி செய்யாமல், பயனுள்ள வகையில் பயிற்சி செய்தது.
2007ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அந்த போட்டிக்கு பின் இருந்த கட்டாய பயிற்சியை இந்திய அணி தவிர்த்தது. அந்த நடைமுறையை அறிமுகம் செய்தது அப்போதைய கேப்டன் அனில் கும்ப்ளே தான். அவர் அப்போது சொன்ன வார்த்தை இது தான். கூடுதல் பயிற்சி ஒரு அணியை உடனடியாக சிறந்த அணியாக மாற்றி விடாது என்றார்.
கும்ப்ளே - கேரி கிர்ஸ்டன் காலத்தில் தான் பயிற்சி தேவைப்பட்டால் மட்டும் வீரர்கள் செய்து கொள்ளும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்களுக்கு பயிற்சி தேவையா இல்லையா என்பதை அவர்களே தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இப்போது ரவி சாஸ்திரி - விராட் கோலி கூட்டணியும் அதே நடைமுறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று இருக்கிறார்கள். பயிற்சிக்கும், தயார் நிலைக்கும் இடையே ஒரு கூட்டணியை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த இந்திய அணியும் ஐபிஎல் தொடரில் 14 அதிக அழுத்தம் கொண்ட போட்டிகளில் பங்கேற்று, பின்னிரவு வரை விழித்து இருந்து, கடுமையான பயண அட்டவணையில் உழன்று, கணக்கில்லாத ஐபிஎல் விளம்பரங்களில் பங்கு கொண்டு உலகக்கோப்பைக்கு வந்துள்ளார்கள்.
கிரிக்கெட் தொடர்கள் வெறும் திறமையினால் மட்டுமே வெல்லப்படுவதில்லை. அதற்கு மாற்று சிந்தனையும் தேவை. இந்தியா அந்த விஷயத்தில் சரியாக செயல்பட்டு வருகிறது.