சவுதாம்ப்டன் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா ஆடிய பேட்டிங் மோசமாக இருந்தது. அதை பலரும் பல விதமாக விமர்சித்த நிலையில், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போகிற போக்கில் நக்கலாக விமர்சித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி சிறிய அணி என்பதால் இந்தியா சாதனை செய்யப் போகிறது என எதிர்பார்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில், கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்துச் சென்று தான் வெற்றி பெற்றது இந்தியா.
இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ஆடுகளம் மந்தமாக இருப்பதாக கூறி இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் பொறுமையாக ரன் சேர்த்து வெறுப்பேற்றினர். கோலி மட்டுமே 100க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார்.
இந்தியா ஆப்கன் அணியின் சுழற் பந்துவீச்சில் திணறியது. அதிலும், தோனி, கேதார் ஜாதவ் கடைசி நேரத்தில் டொக்கு வைத்து ஆடியது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்தது. இது குறித்து தான் விமர்சித்துள்ளார் ஸ்ரீகாந்த்.
ஸ்ரீகாந்த் கூறுகையில், "விக்கெட் மந்தமாக இருந்தது. ஆனால், உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்தியா மத்திய ஓவர்களில் சிக்கிக் கொண்டது. இந்தியா கொஞ்சம் எளிதாகவே ஆடி இருக்கலாம். ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் என்பதால் இந்திய வீரர்கள் கொஞ்சம் அதிகமாகவே அவர்களுக்கு மரியாதை அளித்து ஆடி விட்டார்கள். அதனால் தான் இந்தியா 225 ரன்களுக்குள் சுருண்டது. ஆனால், இந்தியா வெற்றி பெற்றது, அது தான் முக்கியம் என்றார்.
மற்ற விமர்சகர்கள் தோனி - ஜாதவ் பற்றி வெளிப்படையாக விமர்சித்த நிலையில், ஸ்ரீகாந்த், "ரொம்ப மரியாதை கொடுத்து ஆடிட்டாங்க" என பட்டும் படாமல், அதே சமயம் நக்கலாக விமர்சித்துள்ளார்.
மேலும், போட்டி குறித்து கருத்து தெரிவித்த அவர், விராட் கோலியின் கேப்டன்சி தான் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணம். இந்தப் போட்டி இப்படி கடைசி வரை செல்லும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இந்த ஷாக் ட்ரீட்மன்ட் இனி வரும் போட்டிகளில் இந்தியா எச்சரிக்கையாக இருக்க உதவும் என்றார்.