மோசமான சாதனை
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரஷித் கான் உலகக்கோப்பை வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சை பதிவு செய்து அதிர்ச்சி அளித்து இருந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 9 ஓவர்களில் 110 ரன்கள் கொடுத்து கடும் அதிர்ச்சி அளித்தார். இது தான் உலகக்கோப்பை தொடரின் வரலாற்றில் மிக மோசமான பந்துவீச்சு.
கிண்டல்
இந்த மோசமான பந்துவீச்சுக்கு பின் இணையத்தில் பலராலும் கிண்டல் செய்யப்பட்டார் ரஷித் கான். சிலர் அவர் டி20 போட்டிகளில், ஐபிஎல்-இல் பெரிய ஆள். ஆனால், ஒருநாள் போட்டிகளில், உலகக்கோப்பை தொடரில் சின்னப் பையன் என கிண்டல் செய்தனர்.
ஐஸ்லாந்து கேலி
ஐஸ்லாந்து கிரிக்கெட் போர்டின் ட்விட்டர் பக்கத்தில், ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக்கோப்பை தொடரில் முதல் சதம் அடித்துள்ளார். வாழ்த்துக்கள் என்று கூறி அவரை கேலி செய்து இருந்தனர். பலரும் அந்த பதிவுக்கு கண்டனம் எழுப்பி இருந்தனர்.
அடுத்து இந்திய அணி
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி அடுத்து வலுவான அணிகளில் ஒன்றான இந்திய அணியை சந்திக்க உள்ளது. இதற்கு முன் ரஷித் கானிடம் அவரது மோசமான பந்துவீச்சு மற்றும் அது தொடர்பான கேலி, கிண்டல் குறித்து கேட்கப்பட்டது.
ரஷித் கான் வேதனை
அதற்கு பதில் அளித்த ரஷித் கான், அந்தப் போட்டியை பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. மக்கள் 10 நல்ல நாட்களை எளிதாக மறந்து விடுகிறார்கள். ஒரு மோசமான நாளை நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். ரஷித் அதற்கு முந்தைய 10 நாட்களில் என்ன செய்தார் என்பதை யாரும் நினைவில் கொள்ள விரும்புவதில்லை என்று புலம்பித் தள்ளினார்.
அர்த்தமில்லை
நான் அந்தப் போட்டியில் செய்த தவறுகள் மீது தான் கவனம் செலுத்தி வருகிறேன். அடுத்த போட்டியில் அதை களைவேன். விமர்சனங்களை குறித்து சிந்திப்பதில் அர்த்தமில்லை என்றார் ரஷித் கான்.
கேப்டனுடன் சண்டையா?
ஆப்கானிஸ்தான் அணியில் பல குழப்பங்கள் நிலவி வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன் அந்த அணியின் கேப்டன் திடீரென மாற்றப்பட்டார். அந்த விவகாரத்தில் ரஷித் கான் வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதை மறுத்துள்ளார் அவர். யார் கேப்டன் என்றாலும் தான் ஆப்கானிஸ்தான் அணிக்காக தான் விளையாடுவதாக கூறினார்.