IND vs AFG: வெறும் 20 பந்துகள் ஆடியவருக்கு எதற்கு ஓய்வு? கம்பீர் முடிவை சாடிய முன்னாள் வீரர்
சென்னை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளித்த இந்திய அணி நிர்வாகத்தின் முடிவை முன்னாள் கிரிக்கெட் வீரர் தொட்டா கணேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான இந்த இறுதிப் போட்டி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதற்கிடையில், இந்திய அணி நிர்வாகம் மீண்டும் ஒருமுறை வீரர்களை மாற்றி அமைத்தது. அதன்படி கே.எல். ராகுல், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக ஹர்ஷ் துபே, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

ராகுலுக்கு எதற்கு ஓய்வு?
ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொட்டா கணேஷ், முதல் இரண்டு போட்டிகளில் சேர்த்து வெறும் 20 பந்துகளை மட்டுமே (முதலாவது போட்டியில் 19 பந்துகளில் 39* ரன்கள் மற்றும் இரண்டாவது போட்டியில் 1 பந்தில் 0 ரன்) எதிர்கொண்ட ராகுலுக்கு இந்த ஓய்வு தேவையற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து எக்ஸ் (X) சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ள கணேஷ், "கே.எல். ராகுலுக்கு இந்த ஓய்வு தேவையில்லை. அவர் இந்த தொடரில் வெறும் 20 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டுள்ளார். இதில் எந்தவொரு நியாயமும் இல்லை என்று தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கே.எல். ராகுல், இதுவரை 96 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50.73 சராசரியிலும், 91.00 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 20 அரைசதங்கள் மற்றும் 8 சதங்களுடன் 3,399 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது நல்ல முவு என்று கூறியுள்ளார்.
திணறிய ஆப்கானிஸ்தான்
முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே ஏமாற்றமாக அமைந்தது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ரஹ்மானுல்லா குர்பாஸ் (5) விக்கெட்டை வீழ்த்தி பிரசித் கிருஷ்ணா அதிர்ச்சியளித்தார். பின்னர் ஆறாவது ஓவரில் ரஹ்மத் ஷா (5) விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். தொடர்ந்து எட்டாவது ஓவரில் இப்ராகிம் சத்ரான் (11) விக்கெட்டையும், பத்தாவது ஓவரில் தர்விஷ் ரசூலி (1) விக்கெட்டையும் பிரசித் கிருஷ்ணா கைப்பற்றினார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 9.2 ஓவர்களில் 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
ஏற்கனவே தர்மசாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 170 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்ட இந்திய அணி, இந்த ஒருநாள் தொடரை ஏற்கனவே கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.


Click it and Unblock the Notifications

