ஆன்டிகுவா : விராட் கோலி, ரோகித் சர்மாவை காட்டிலும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்று இங்கிலாந்து ஜாம்பவான் மைக்கேல் வாஹன் தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியால் எளிதாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் அல்லது நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் விளையாடும்.

இதில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட 2 போட்டிகளில் வென்று அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணியால் முன்னேற முடியும். இருந்தாலும் லீக் போட்டிகளில் இந்திய அணி அமெரிக்கா மைதானத்திலேயே விளையாடியது. மற்ற அணிகள் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளது. இதனால் இந்திய அணி பேட்டிங்கில் சில பின்னடைவை சந்திக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் பேட்டிங் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் பேசுகையில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. என்னை பொறுத்தவரை இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் தான் தொடக்கம் கொடுக்க வேண்டும். விராட் கோலி அல்லது ரோகித் சர்மா இருவரில் யார் வேண்டுமானாலும் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் களமிறங்கி கொள்ளலாம்.

அதனை நினைத்து எனக்கு எந்த கவலையும் இல்லை. அதேபோல் சிவம் துபே நம்பர் 5 வரிசையில் விளையாடி வருகிறார். எனக்கு ரிஷப் பண்ட் அந்த இடத்தில் விளையாட வேண்டும் என்று கருதுகிறேன். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிச்சயம் இடம்பெற வேண்டும்.
அதேபோல் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி பல இடதுகை பேட்ஸ்மேன்களை கொண்டிருப்பது நல்ல விஷயம். இதற்கு முன்பாக இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இந்திய அணி ஐசிசி தொடர்களில் விளையாடி தவறு செய்தது என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியில் ரிஷப் பண்ட், சிவம் துபே, அக்சர் படேல் மற்றும் ஜடேஜா ஆகியோர் இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.