டெல்லி: டெல்லி மைதானத்தில் தனது பெயர் ஸ்டாண்ட் முன்பாக விளையாடுவதற்கு சங்கடமாக இருப்பதாக இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடக்கவுள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. வலிமையான ஸ்பின் அட்டாக்கை கொண்டுள்ளதால், இந்திய ஆடுகளங்களில் ஆஃப்கானிஸ்தான் அணியை அவ்வளவு எளிதாக வீழ்த்திவிட முடியாது.

அதுமட்டுமல்லாமல் டெல்லி மைதானத்தில் பவுண்டரி எல்லைகள் சிறிய தூரம் கொண்டதால், நிச்சயம் இன்றைய ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் விளாசப்படும். அதேபோல் டெல்லி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே அதிகமாக வெற்றிபெற்றுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் டாஸ் முக்கியத்துவம் பெறும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி தனது சொந்த மண்ணில் களமிறங்குவதும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் - விராட் கோலி ஆகியோரின் உரையாடல் வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் டெல்லியில் களமிறங்குவது குறித்து விராட் கோலி பேசி இருக்கிறார். அதில், சிறுவயது முதல் டெல்லி மைதானத்தில் தான் வளர்ந்திருக்கிறேன். எனது சிறுவயது கிரிக்கெட் ஆட்டங்கள், ரஞ்சி டிராபி போட்டிகள், இந்திய அணிக்காக டெல்லி மைதானத்தில் ஆடியது என்று அத்தனை நினைவுகள் அப்படியே மனதில் பதிந்துள்ளது.
டெல்லி மைதானத்தில் எனது வாழ்க்கை தொடங்கியது. தேர்வு குழு நிர்வாகிகள் டெல்லி மைதானத்தில் நான் விளையாடுவதை பார்த்து தான் வாய்ப்பை வழங்கினார்கள். டெல்லி மைதானத்தில் துணை பிட்ச்களில் நாங்கள் ஆடும் போது, ரஞ்சி டிராபி வீரர்களுக்கான பயிற்சி முக்கிய பிட்ச்களில் நடக்கும். அதனை எப்போதும் ஆவலாக பார்ப்போம். தற்போது மீண்டும் டெல்லி மைதானத்தில் விளையாட போகிறோம் என்பதே நல்ல உணர்வை கொடுக்கிறது.
அதேபோல் டெல்லி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள என் பெயர் கொண்ட ஸ்டாண்ட் முன்பாக விளையாடும் போது சிறிது சங்கடமாக இருக்கும். ஆனால் அதனை பற்றி பெரிதாக கூற விரும்பவில்லை. ஆனால் என் சொந்த மண்ணில் உள்ள மைதானத்தில் என் பெயரில் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. இப்படியொரு மரியாதை அளிக்கப்படும் என்று நினைத்து பார்த்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார்.