பார்படாஸ் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை இந்திய அணியின் பவுலர்களே ஆட்டநாயகன் விருதை கைப்பற்றி வந்த நிலையில், முதல்முறையாக இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 49 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்திய சூர்யகுமார் யாதவ், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 53 ரன்களை விளாசியுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் தவிர்த்து இந்த போட்டியில் இரு அணிகளிலும் சேர்த்து பார்த்தால் கூட அதிகபட்சம் ஸ்கோர் ஹர்திக் பாண்டியாவின் 32 ரன்கள் தான். இதன் மூலமாகவே பிட்ச் எந்த அளவிற்கு பேட்டிங்கிற்கு உதவியாக இருந்தது என்று தெரிந்து கொள்ள முடியும். இதன் காரணமாக ஆட்டநாயகன் விருது சூர்யகுமார் யாதவிற்கு அளிக்கப்பட்டது.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பவுலர்களே இதுவரை ஆட்டநாயகன் விருதை வென்று வந்த நிலையில், முதல்முறையாக பேட்ஸ்மேன் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார். இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், இந்த இன்னிங்ஸிற்கு பின் ஏராளமான உழைப்பு உள்ளது. தொடர்ச்சியாக சில விஷயங்களை நாங்கள் சில பயிற்சிகளை செய்து வந்திருக்கிறோம்.
நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் மனதளவில் தெளிவாக இருந்தேன். இந்த விருதினை பவுலர்களுக்கு கொடுத்தாலும் சரியாக முடிவாக நினைப்பேன். முதல்முறையாக ஒரு பேட்ஸ்மேனாக ஆட்டநாயகன் விருதை வெல்வது மகிழ்ச்சியாக உள்ளது. டி20 கிரிக்கெட்டில் திட்டத்தை களத்தில் செயல்படுத்த வேண்டும். அதற்கேற்ப நமது ஆட்டமும் இருக்க வேண்டும்.
ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய வரும் போது, எந்த மாற்றத்தையும் செய்யாமல் அட்டாக்கிங் ஷாட்ஸ் விளையாடுவோம் என்று கூறினேன். ஏனென்றால் பந்து கொஞ்சம் பழையதாக மாறிய போது, ரிவர்ஸ் ஆவதை கண்டேன். அதனால் 16 ஓவர்கள் வரை களத்தில் இருந்து அட்டாக் செய்ய முடிவெடுத்தோம். அதன்பின் இறுதி ஓவர்களில் பார்க்கலாம் என்பதே திட்டமாக இருந்தது. ரஷீத் கான் போன்ற வீரரை அட்டாக் செய்வது எளிதல்ல.
டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் ரஷீத் கான். அவரை போன்ற பவுலர் விளையாடும் போது, நாம் தான் அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஆட்டம் எப்போது வேண்டுமானாலும் கைமாறும். வழக்கமாக 7 முதல் 15 ஓவர்களில் தான் பவுலர்கள் கட்டுப்படுத்த முயற்சிப்பார்கள். டி20 கிரிக்கெட்டில் அது பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க கடினமாக ஓவர்கள். அந்த ஓவர்களில் அட்டாக் செய்வதால் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.