பார்படாஸ் : இந்திய அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற 182 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பார்படாஸ் மைதானத்தில் 170 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சேஸிங் செய்வது சிறிது கடினமாக இருக்கும். சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து அமைத்த 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூபப்ர் 8 சுற்றில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணியை களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவரும் நிதானமாக தொடங்கிய நிலையில், இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஃபரூக்கியிடம் ரோகித் சர்மா 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன்பின் விராட் கோலி - ரிஷப் பண்ட் கூட்டணி இணைந்து ரன்களை சேர்த்தது. சில நிமிடங்கள் அமைதி காத்த ரிஷப் பண்ட், நபி வீசிய 6வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசி அசத்தினார். இதனால் இந்திய அணி 6 ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் ரஷீத் கான் வீசிய 7வது ஓவரில் ரிஷப் பண்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து விராட் கோலியும் ரஷீத் கானை அட்டாக் செய்ய முயன்று 24 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சிவம் துபேவும் 10 ரன்களில் வீழ்ந்தார்.
இதனால் இந்திய அணி 11 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்து விளையாடி கொண்டிருந்தது. இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் - ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். ஒரு பக்கம் ஹர்திக் பாண்டியா நிதானம் காக்க, மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் தனது ஸ்டைலில் ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு ஓவருக்கும் சிக்சரும், பவுண்டரியும் அடிக்கப்பட, 15 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 126 ரன்களாக உயர்ந்தது.
பின்னர் நூர் அஹ்மத் வீசிய 16வது ஓவரில் ஹர்திக் பாண்டியா அபாரமாக ஒரு சிக்ஸ் அடித்து அதிரடிக்கு திரும்பினார். தொடர்ந்து ஃபரூக்கில் பவுலிங்கில் சிக்ஸ், பவுண்டரி விளாசி சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அடுத்த பந்தில் மீண்டும் சிக்ஸ் அடிக்க முயன்ற சூர்யகுமார் 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து வெளியேற, ஜடேஜா களமிறக்கப்பட்டார். 18வது ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்று ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கடைசி நேரத்தில் ஜடேஜா - அக்சர் படேல் கூட்டணி இணைந்தது. ஃபரூக்கில் வீசிய 19வது ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டதோடு, ஜடேஜா 7 ரன்களில் வெளியேறினார். கடைசி ஓவரை வீச நவீன் உல் ஹக் அழைக்கப்பட்டார். அதில் பெரிய பவுண்டரி தூரத்தை பயன்படுத்தி ஒய்டு யார்க்காக வீசினார். இதனையறிந்த அக்சர் படேல் சிறப்பாக 2 பவுண்டரி அடிக்க, மொத்தமாக 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.