பார்படாஸ் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை எட்ட முடியாத ஆஃப்கானிஸ்தான் அணி, பும்ராவின் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 8 சுற்று போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும், ஹர்திக் பாண்டியா 34 ரன்களும் சேர்த்தனர். அதேபோல் ஆஃப்கானிஸ்தான் தரப்பில் ரஷீத் கான் மற்றும் ஃபரூக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின் 182 ரன்கள் என்ற சவாலான இலக்கு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு குர்பாஸ் - ஹஸ்ரத்துல்லா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸ், பவுண்டரி உட்பட 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் பும்ரா வீசிய 2வது ஓவரில் குர்பாஸ் 11 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேற, தொடர்ந்து வந்த அதிரடி வீரர் ஜத்ரான் அக்சர் படேல் பவுலிங்கில் 8 ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஹஸ்ரத்துல்லாவும் பும்ராவிடம் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஃப்கானிஸ்தான் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் அனுபவ வீரர்களான குல்புதீன் நைப் - ஒமர்சாய் கூட்டணி இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தது. இருவரும் விக்கெட் கொடுக்கக் கூடாது என்று கவனமாக விளையாடினர். அதேபோல் சில அபார சிக்சர்களையும் விளாச, ஆஃப்கானிஸ்தான் அணி 10 ஓவர்களில் 66 ரன்களை சேர்த்தது. இதன்பின் ஆஃப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதனை புரிந்து கேப்டன் ரோகித் சர்மா, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
அவர் வீசிய 2வது பந்திலேயே நன்றாக ஆடிக் கொண்டிருந்த குல்புதீன் நைப் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் ஒமர்சாய் 26 ரன்களில் வெளியேறினார். பின்னர் நஜிபுல்லா - முகமது நபி இருவரும் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். இருப்பினும் கடைசி 6 ஓவர்களில் ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு 91 ரன்கள் சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது பும்ரா பவுலிங்கில் நஜிபுல்லாவும் 19 ரன்களில் ஆட்டமிழக்க, நபி 14 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.
பின்னர் வந்த ரஷீத் கான் 2 ரன்களிலும், நவீன் உல் ஹக் டக் அவுட்டாகியும் அர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் வெளியேறினர். இறுதியாக ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பவுலிங் செய்த பும்ரா 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.